1. Home
  2. ஆன்மீகம்

ருத்ராட்சம் அணிவது பற்றி ஸ்ரீமத்தேவி பாகவதம் என்ன சொல்கிறது தெரியுமா?

1

உலகிலுள்ள உயிரினங்களின் நன்மைக்காக சிவப்பெருமான் பல்லாண்டு காலம் தியானம் செய்தார். தியானம் முடிந்து கண்களைத் திறந்த சிவப்பெருமானின் கண்களில் இருந்து பெருகிய ஆனந்த கண்ணீர்  உருத்திராட்ச மணிகளாக மாறியதாக சிவபுராணம் கூறுகிறது. ருத்ரம் என்றால் சிவன் என்று பொருள்படும். அட்சம் என்பது சிவனுடைய கண்களையும் குறிப்பதாகும். சிவனின் முக்கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் சொட்டுகள் என்பதால் இதற்கு ருத்ராட்சம் என்ற பெயர் வந்தது. இதற்கு கடவுண்மணி, நாயகமணி, தெய்வமணி, சிவமணி, கண்மணி என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டுவருகிறது.

ஆண்,பெண், மதம், இனம் என எந்தவிதமான பேதமுமின்றி அனைவரும் ருத்ராட்சம் அணியலாம். ருத்ராட்சம் அணிவது பற்றி ஸ்ரீமத்தேவி பாகவதம்  என்ன சொல்கிறது தெரியுமா? எந்தவிதமான மந்திரங்களை உச்சரிக்காதவனும், யாகங்களைச் செய்யாதவனும் , அறியாதவனும் கூட ருத்ராட்ச மணிகளைத் தொட்டால் கூட அவன் செய்த பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுபடுவானாம். ருத்ராட்ச மாலையை அணிந்து அதை வழிபடுபவன் சம்சார பந்தங்களிலிருந்து விடுபட்டு, அவன் மீண்டும் எடுக்கும் அத்தனை பிறவிகளிலுமிருந்தும் விடுபடுவான். ருத்ராட்சம் மீது நம்பிக்கை இருந்தாலும், இல்லையென்றாலும் அதை அணிந்து கொண்ட காரணத்துக்காகவே அவன் ருத்ர அம்சத்தைப் பெறுவானாம். மேலும் ருத்ராட்சம் அணிந்த சிவனடியார்களின் பாதங்களைக் கழுவி அந்த நீரை தீர்த்தமாக ஏற்றுக்கொள்பவன் சிவலோகத்தை அடைகிறான். ருத்ராட்சம் அணிந்தவர்களுக்கு எவன் ஒருவன் உணவும், உடையும் தருகிறானோ அவனும்  சிவலோகத்தை அடைகிறான். 

ருத்ராட்சம் மணிகள் மஞ்சள், வெண்மை, கறுமை என மூன்று நிறங்களைக் கொண்டிருக்கும்.சிவபெருமானின் வலக்கண்ணிலிருந்து மஞ்சள் ருத்ராட்சங்கள் 12-ம், இடது கண்ணிலிருந்து 16 வெள்ளை ருத்ராட்சங்களும்,சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து 10 கறுமை நிற  ருத்ராட்சங்களும் தோன்றின. ருத்ராட்சம் 1 லிருந்து 21 முகங்கள் வரை கொண்டிருக்கும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. இயற்கையில் விளைந்த ருத்ராட்சம் இயற்கை சக்திகளையும் அள்ளித் தருகிறது. பஞ்ச பூதங்களின் சேர்க்கை தான் நவகிரகம். அத்தகைய நவகிரகங்களினால் ஒருவனுக்கு உண்டாகும் பாதிப்பைக் குறைக்க ருத்ராட்சம் உதவுகிறது. ஆனால்  தவறான ருத்ராட்சம் அணிந்தால் பல கேடுகளை அனுபவிக்க வேண்டியதாகி விடும். 

 ருத்ராட்சம் பார்த்தாலே மகா புண்ணியம் கிடைக்கும். அதைத் தொட்டு பார்த்தால் கோடி புண்ணியம் என்று சொல்வார்கள். அதை அணிந்தால் அளவற்ற புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதிகம்.  

Trending News

Latest News

You May Like