இது தெரியுமா ? நட்சத்திரங்களுக்கு ஏற்ப விநாயகரை வழிபாடு செய்தால் நற்பலன் கிடைக்கும்..!

நட்சத்திரங்களுக்கு ஏற்ப விநாயகர் வழிபாடு குறித்து விளக்குகிறது இந்தப்பதிவு.
1.மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய சரலக்னங்களில் ஒரு லக்னம் உதிக்க சித்திரை, உத்திராடம், ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வளர்பிறையில் வரும் சனிக்கிழமைகளில் சூரிய உதயத்திற்கு பின்னர் வரும் ஒன்றரை மணி நேரத்துக்குள்... அதாவது காலை 6.00 மணி முதல் 7.30-க்குள் தேங்காய் உடைத்து, அருகம்புல்லினால் விநாயகரை அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேனும் பாலும், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மோதகமும், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பாசிப் பயறும் நைவேத்தியம் செய்து வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வழிபடவேண்டும். மேற்கூறிய லக்னங்கள் உதிக்க பிற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வளர்பிறை செவ்வாய், சனிக் கிழமைகளில் தேங்காய் உடைத்து செவ்வரளிப் பூக்கள் கொண்டு வினாயகரை அர்ச்சனை செய்து, பசும்பால், அப்பம், வடை, அவல், பொரிகடலை நைவேத்தியம் செய்து வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வழிபடவேண்டும். இதனால் எடுத்த காரியங்களில் இடர் நீங்கி காரிய சித்தி உண்டாகும். சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.
2. ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ஸ்திர லக்னங்களில் ஒரு லக்னம் உதிக்க எந்த நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் வளர்பிறை செவ்வாய், சனிக்கிழமைகளில் விடியற்காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் அதாவது காலை 4.00 மணிமுதல் 6.00 மணி வரையான காலத்தில் தேங்காய் உடைத்து, வெள்ளெருக்கு மலர் அல்லது வெள்ளரலி மலர் அல்லது வெண்தாமரை மலரினால் அர்ச்சனை செய்து, பசும் பால், அவல், கொண்டக்கடலை சுண்டல், பாசிப்பயறு நைவேத்தியம் செய்து வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வழிபடவேண்டும். இதனால் எடுத்த காரியங்களில் இடர் நீங்கி காரிய சித்தி உண்டாகும். சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.
3. மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய உபய லக்னங்களில் ஒரு லக்னம் உதிக்க எந்த நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் வளர்பிறை செவ்வாய், சனிக்கிழமைகளில் சந்தியா காலத்தில் அதாவது காலை 5.15மணி முதல் 6.45மணி வரையிலான காலத்தில் தேங்காய் உடைத்து, மல்லிகைப் பூ அல்லது முல்லைப் பூ அல்லது செந்தாமரை மலரினால் அர்ச்சனை செய்து பசும் பால், பால்ப்பாயாசம், பானகம் நைவேத்தியம் செய்து வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வழிபடவேண்டும். இதனால் எடுத்த காரியங்களில் இடர் நீங்கி காரிய சித்தி உண்டாகும். சகல சௌபாக்கியங்களும் கிட்டும்
வினைகள் தீர்க்கும் விநாயகா போற்றி!