உலகக் கல்லீரல் அழற்சி நாள் - ஜூலை 28.
உலகக் கல்லீரல் அழற்சி நாள் - ஜூலை 28.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.ஹெபடைட்டிஸ் பி வைரஸைக் கண்டுபிடித்த பேராசிரியர் புளூம்பெர்க்கின் பிறந்த தினமான இன்று அவரது நினைவாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
கல்லீரல் அழற்சி நோய்களுக்கான அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த நாள் உலக சுகாதார அமைப்பால் (WHO) ஏற்படுத்தப்பட்டது.
உலகளவில் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் கடும் கல்லீரல் அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் பேர் இந்நோயின் தாக்கத்தால் மரணமடைகின்றனர்.
உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்ட எட்டு மக்கள் நல்வாழ்வுப் பரப்புரைகளில் உலகக் கல்லீரல் அழற்சி நாளும் ஒன்று. மற்ற ஏழு நாட்கள்: உலக சுகாதார நாள், உலக குருதிக் கொடையாளர் நாள், உலக நோய் எதிர்ப்புத் திறனூட்டல் வாரம், உலக காச நோய் நாள், உலக புகையிலை எதிர்ப்பு நாள், உலக மலேரியா நாள், உலக எயிட்ஸ் நாள்.
உடலின் உறுப்புகளில், நம் இதயம், மூளையைப் போலவே முக்கியமான இன்னொரு உடல் உள் உறுப்பு கல்லீரல். ஆனால் இதயம், மூளை ஆகிய உறுப்புகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், கல்லீரலுக்குக் கொடுக்கப்படுவதில்லை. உடலின் ரத்தம் முழுவதும் கல்லீரல் வழியே தினமும் பல முறை கடந்து செல்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட பணிகளைக் கல்லீரல் செய்கிறது. ஆனால், குடிப் பழக்கம், தவறான உணவு பழக்கம், வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவற்றின் காரணமாகக் கல்லீரலைப் பல வகைகளில் பாதிப்புக்கு உள்ளாக்குகிறோம்.
இன்றைக்கு உலக அளவில் மனிதர்களின் இறப்புக்கு மூன்றாவது முக்கிய காரணமாக இருப்பது கல்லீரல் கோளாறுகள்தான். உலகில் ஒவ்வோர் ஆண்டும் 15 லட்சம் பேர் கல்லீரல் பாதிப்பு காரணமாக உயிரிழப்பதாக, உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது. சிக்கல் என்னவென்றால் கல்லீரலில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அது உடனே தெரிய வராது. பிரச்சினை தீவிரமடைந்த பிறகே அறிகுறிகள் தெரியவரும். அதனால் கல்லீரல் நோய்களை லேசாக எடுத்துக்கொண்டால், நமக்குத்தான் ஆபத்து.
கல்லீரலைப் பாதிக்கும் வைரஸ் கிருமிகளை ஹெப்படைட்டிஸ் என அழைக்கிறார்கள். ஹெப்படைட்டிஸ் கிருமிகளில் ஏ, பி, சி, டி, இ எனப் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரச்சினையை ஏற்படுத்தினாலும், அனைத்துமே கல்லீரலைப் பாதிக்கும் வைரஸ் கிருமிகளே. பொதுவாக வைரஸ் கிருமிகளால் கல்லீரல் பாதிக்கப்பட்டால், கல்லீரல் அழற்சி அல்லது வீக்கம் உண்டாகும். கல்லீரல் செல்கள் அழற்சி அடைவதாலேயே ஹெப்படைட்டிஸ் வைரஸ் கிருமி தொற்றவும் முடிகிறது.
கல்லீரல் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் துளசி, மாதுளம்பழத்துடன் 4 ஏலக்காய், அரை துண்டு சுக்கு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் காய்ச்சி பாதியாக வற்றியதும் பால், தேன் கலந்து குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு கிடைக்கும். இவை தவிர கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, கொத்தமல்லி போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
இன்றைக்கு உலகில் ஹெப்படைட்டிஸ் பி, ஹெப்படைட்டிஸ் சி வைரஸ் பாதிப்பால் 50 கோடிப் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஹெப்படைட்டிஸ் பி, சியை கவனிக்காமல் விட்டுவிட்டால் சிரோசிஸ் (கல்லீரல் இழைநார் வளர்ச்சி நோய்), கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் செயலிழப்பு போன்றவை ஏற்படலாம். என்பதை உரத்தக் குரலில் நினைவூட்டும் நாளின்று.
newstm.in