1. Home
  2. ஆரோக்கியம்

அந்த மூன்று நாட்களை வயிறுவலி இல்லாமல் கடக்க

அந்த மூன்று நாட்களை வயிறுவலி இல்லாமல் கடக்க


வயிறு வலி உபாதையால் பாதிக்கப்படாத பெண்களே இல்லை. குறிப்பாக 28 நாட்களுக்கு ஒருமுறை மாத விடாய் சுழற்சி ஏற்படும் அந்த மூன்று நாட்கள் அவஸ்தைகளை வார்த்தைகளில் சொல்லி புரிய வைக்கமுடியாது.

கடந்த 30 வருடங்களுக்கு முன்பு வரையும் கூட மாதவிலக்கு உண்டாகும் நாள்களில் வயது பேதமின்றி அனைத்து பெண்களும் அனைத்து வேலைகளிலிருந்தும் விலக்கி வைக்கப்பட்டார்கள். பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த வீடுகளில் கூட அந்த நாட்களில் அவர்களுக்கு கட்டாய ஓய்வை அளித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பெண் பூப்படைந்த காலத்திற்கு பிறகு ஒவ்வொரு மாதமும் கருப்பையில் கருமுட்டைகள் உருவாகும். இவை கருவடையாத பட்சத்தில் வெளியேறும். இவைதான் இரத்தபோக்காகும். சிலருக்கு இந்த இரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். இக்காலத்தில் அடிவயிறு அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான வலி உருவாகும். இந்த வலியின் தீவிரம் மிகவும் அதிகமாக இருக்கும் பெண்கள் படுக்கையை விட்டு எழவே முடியாத அளவுக்கு உணவில்லாமல் படுக்கையில் சுருண்டு படுத்து நாள்களைக் கழிப்பார்கள்.

இரத்தப்போக்கும், ஒருவித அசெளகரியமான உணர்வும் அனுபவிக்கும் பெண்கள் வயிற்றுவலியைப் போக்க சோடா, வாயுமிக்க செயற்கை குளிர் பானங்கள் குடிப்பார்கள். அந்த நேரத்துக்கு இவை மூளைக்கும் உடலுக்கும் புத்துணர்வு கொடுத்தாலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதேபோல் சிலர் மருத்துவரது ஆலோசனையின்றி வலி மாத்திரைகளை எடுத்துக்கொண்டு பணி செய்வதும் தொடர்கிறது. இது தொடர்கதையாகும் பட்சத்தில் நாளடைவில் பக்க விளைவுகளை உண்டாக்கும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

மாத்திரைகளின்றி நமது வாழ்க்கை முறைகளை மாற்றி அமைத்துக் கொள்வதன் மூலம் அந்த மூன்று நாட்களையும் சாதாரணமாக கடந்துவிடலாம். மாத விடாய் நெருங்கும் நாட்களுக்கு முன்பு நடைப்பயிற்சி செய்ய வேண்டும். படிக்கட்டுகளில் ஏறி இறங்கி உடலுக்கு வலு கொடுக்கலாம். குனிந்து நிமிர்ந்து வேலை செய்வது நல்லது.

உடல் சூட்டால் வயிறு வலி வரும் என்பதால் வாரந்தோறும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியதை கடைப்பிடிக்கலாம். தற்போது மாதவிடாய் காலங்களில் வயிறு வலியிலிருந்து தலைவலி, இடுப்பு வலி, மன உளைச்சல் போன்றவற்றையும் பெண்கள் அனுபவித்துவருகிறார்கள்.

மாதவிடாய் காலங்களின் போது உடல் உஷ்ணம் குறைய எலுமிச்சைச்சாறில் உப்பு, நாட்டுச்சர்க்கரை சேர்த்து அருந்தலாம். மாதவிடாய் நெருங்கும் காலங்களில் இருந்து தினமும் முன் தினம் இரவு அரைத்தம்ளர் நீரில் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஊறவைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். வெந்தயத்தை முடிந்தால் மென்று சாப்பிட்டோ அல்லது அப்படியே முழுங்கவோ கூட செய்யலாம். அல்லது வெந்தயத்தைப் பொடி செய்து வைத்துக் கொண்டு நீரில் கரைத்தும் குடிக்கலாம்.

தொடர்ந்து மூன்று மாத காலங்கள் எடுத்துக்கொண்டால் எவ்வளவு நாள்பட்ட மாதவிடாய் வலியும் நாளடைவில் இல்லாமல் போகும்.
அந்த மூன்று நாட்களை மகிழ்ச்சியுடன் கடக்க வெந்தயம் ஒன்றே போதுமானது என்பதை நிவாரணம் கண்டபிறகு நீங்களும் சொல்வீர்கள்..

newstm.in

Trending News

Latest News

You May Like