1. Home
  2. ஆரோக்கியம்

உடல் நலமா இருக்க...நீண்ட காலம் ஆரோக்கியமா வாழ...உங்க உணவுப் பழக்கத்தை இப்படி மாத்துங்க...

1

ஒருவரது உடலமைப்பு, இதயம், மூளை போன்ற உறுப்புகள் கருவிலேயே உருவாகின்றது. இவற்றின் இயல்பான செயல்பாடுகளில் ஏற்படும் மாறுதல்கள் நோய் ஏற்படுவதற்கு அடிப்படை காரணமாகும். சரியான உணவு நம் உடலுக்குத் தேவையானவற்றை தந்து உடம்பை வலுப்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.

ஜீரணம் நன்கு ஆகும். உடலின் தேவையில்லாத கழிவு வெளியேறும். பருவத்துக்கேற்ற உணவு பருவக் காலத்திற்குத் தகுந்தபடி நம் உடம்பை மாற்றி வைக்கும். ஒரு நல்ல உணவானது உடலை பலப்படுத்துகிறது. ஆயுளை அதிகரிக்கச் செய்கிறது.

காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கிறது. ஏனெனில் நம் உடலில் முக்கியமான செயல்பாடுகள் அனைத்திற்கும் தண்ணீர் என்பது அவசியம். ஒவ்வொரு நாளும் வெதுவெதுப்பான நீரை மட்டும் பருகி வந்தால் செரிமான பிரச்சினைகள் முதல் முகப்பரு மற்றும் தோல் பிரச்சனைகள் வரை சரியாகுகிறது. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது.நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும் போது நீரின் அழுத்தம் அதிகமாக இருக்கும். அதனால் அடிவயிறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும், செரிமான பகுதிகளுக்கும் வேகமாக செல்லும் நீர் ஜீரண பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். தொடர்ச்சியாக நின்று கொண்டே நீர் அருந்தினால் இதயம் மற்றும் நுரையீரல் இயக்கங்களுக்கும் பிரச்சினைகள் ஏற்படலாம்.

தேவைக்கு அதிகமாக உண்ணும் பழக்கத்தை புறக்கணிக்க வேண்டும். பசியுடன் இருக்கும் பொழுது தான் சாப்பிட வேண்டும். ஆயுர்வேதத்தில் இது ஆரோக்கியமான உணவு முறையாக கருதப்படுகிறது. நாள் முழுவதும் ஒரு சம இடைவெளி விட்டு சாப்பிட வேண்டும். வயிறு நிறைய சாப்பிடும் பழக்கத்தை கைவிட வேண்டும்.

நொறுங்க தின்றால் நூறு வயது வரை வாழலாம் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். வாயில் இருக்கும் உமிழ்நீரோடு உணவை நன்றாக மென்று சாப்பிடுவதால் எளிதாக ஜீரணிக்கும். அப்பொழுது தான் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது. உணவின் அதிகபட்ச சுவையை உணர முடிகிறது.

சாப்பிடுவதற்கு அமரும் போது டிவி, போன் பார்ப்பது, செய்தித்தாள், கதை புத்தகம் படிப்பது போன்ற வேலைகளை விடுத்து உண்ணும் உணவில் கவனத்தை செலுத்த வேண்டும்.ஆயுர்வேதத்தின்படி, வேறு வேலையை செய்து கொண்டே சாப்பிடும் உணவானது பயனற்றது ஆகும். மேலும் அவசர அவசரமாக சாப்பிடும் பழக்கம் கூடாது.நம் முன்னோர்கள் கூறுவதுபோல் சரியான நிலையில் நிதானமான மனதுடன் அமர்ந்து சாப்பிடும் போது சீரான செரிமானத்திற்கு ஏதுவாக இருக்கும். வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு மிகமிக குறைவு.

மசாலாப் பொருட்களை விரும்புவோருக்கு இது கடினமாகத் தோன்றலாம். சாத்விக உணவை (வெங்காயம் மற்றும் பூண்டு இல்லாத உணவு) பயிற்சி செய்வது குடல் இயக்கத்தை சீராக வைத்திருப்பது மட்டுமல்லாமல் வளர்சிதை மாற்றத்தையும் பலப்படுத்துகிறது.

நன்கு பசித்து சாப்பிடும் பொழுது உடலுக்கு தேவையான சத்துக்கள் சரியாக போய் சேர்கிறது. ஆனால் சில சமயத்தில் பசியின்மை காரணமாக ஒழுங்கான உணவுமுறை பாதிக்கப்படுகிறது. எனவே நேரத்திற்கு பசிக்காத போது இஞ்சி சாறில் சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சாப்பிட வேண்டும். இது செரிமான நொதிகளை உற்பத்தி செய்து பசி உணர்வை தூண்டுகிறது. இது செரிமானத்திற்கும் சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவியாக இருக்கும்.

ஆயுர்வேதத்தில் குளிர்ந்த நீரைக் குடிப்பது என்பது இரைப்பையின் இயல்பான செயல்பாட்டைத் தொந்தரவு செய்யும் மற்றும் தோஷங்களின் சமநிலையை சீர்குலைக்கும் என்று நம்பப்படுகிறது.

உணவுடன் சேர்த்து, பால் அருந்தக்கூடாது.பட்டை, ஜாதிக்காய் போன்ற நறுமண பொருட்கள் சேர்க்கப்பட்ட பாலை உணவுக்கு 1 மணி நேரம் முன்போ, பின்போ எடுக்க வேண்டும். உணவு உண்டபின் அரை மணி நேரத்திற்குள் பழம், பழச்சாறு எடுக்கக்கூடாது. சாப்பிட்டு முடித்து, அடுத்த வேலைக்கு போகும் முன்பு நீண்ட மூச்சு ஒன்று எடுக்க வேண்டும்.

உணவே மருந்து மருந்தே உணவு. எனவே உண்ணும் உணவை சரியான முறையில் சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். உடலில் ஏற்படும் நோய்களுக்கான தீர்வு நாம் சாப்பிடும் உணவின் மூலம் கிடைப்பதே சரியான முறையாகும். 
 

Trending News

Latest News

You May Like