ஒரு எலுமிச்சை பழத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா ?
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/5abbbb24e202edc70562c94217fd3fd1.webp?width=836&height=470&resizemode=4)
எலுமிச்சையை ‘அரச கனி’ என அழைப்பார்கள். இதன் பயன்பாடு கருதியும், மஞ்சள் நிற மங்களத்தை உண்டாக்கும் என கருதியும் இப்பெயர் முன்னோர்களால் வைக்கபட்டது. எலுமிச்சை பழம் கடவுள் வழிபாட்டுக்கு மிகவும் உகந்ததாகும்.
எலுமிச்சை மரம் சுமார் 15 அடிவரை வளரும் தன்மையுடையது. தமிழகம் முழுவதும் இது பெரும்பாலும் எல்லோருடைய வீட்டுத் தோட்டத்திலும் வளர்க்கப்படுகிறது. எலுமிச்சை செம்மண்ணில் நன்கு வளரும் தன்மை கொண்டது. இத இலைகள் எதிர் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். பூக்கள் வெள்ளை நிறத்திலும், காய்கள் பச்சை நிறத்திலும் உருண்டை மற்றும் ஓவல் வடிவத்திலும் இருக்கும். காய்கள் முற்றி பழம் மஞ்சள் நிறமாக மாறும். விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
எலுமிச்சை வேறு பெயர்கள்
மத்தியக் கிழக்கு நாடுகளிலிருந்து லெமன் என்ற சொல் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பிரெஞ்சு மொழியில் limon என்றும், இத்தாலி மொழியில் limone என்றும், அரபு மொழியில் laymun, சமஸ்கிருதத்தில் nimbu, “lime மற்றும் பாரசீக மொழியில் limun,என்றும், ஆங்கிலத்தில் lime மற்றும் lemon என்றும் அழைக்கபடுகிறது. எலுமிச்சை பொதுவாக எல்லா இடங்களிலும் சிட்ரஸ் பழம் என்ற பெயராலாயே வழங்கப்படுகிறது
எலுமிச்சையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
எலுமிச்சையில் கலோரி – 24%, புரத சத்து – 0.92 கிராம், நார்ச்சத்து – 2.4 கிராம், இரும்பு சத்து – 0.5 மில்லி கிராம், கால்சியம் – 11 மில்லி கிராம், சோடியம் – 2 மில்லி கிராம், பொட்டாசியம் – 138 மில்லி கிராம், சர்க்கரை – 2.5 கிராம், வைட்டமின்கள், மினரல்ஸ் போன்றவை அடங்கியுள்ளன.
எலுமிச்சை பழத்தின் மருத்துவ குணங்கள்
தலைவலி குணமாகும்
ஒரு கப் சூடான காபி அல்லது தேநீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி, பிழிந்து சாறக்கி கலந்து அருந்தி வந்தால் தலைவலி குணமாகும்.
தாகத்தை தணிக்கும்
கோடை காலங்களில் பலருக்கும் நாவறட்சி ஏற்படும். நாவறட்சியை போக்கும் சிறந்த பானமாக எலுமிச்சை ஜூஸ் விளங்குகிறது. இது உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கிறது.
கல்லீரலை பலமாக்கும்
கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறெடுத்து, அதில் தேன் கலந்து குடித்து வந்தால் கல்லீரல் பலப்படும்.
பித்தத்தை குறைக்கும்
எலுமிச்சம் பழ சாற்றில் ஒரு தேக்கரண்டி சீரகத்தையும், ஒரு தேக்கரண்டி மிளகையும் கலந்து வெயிலில் காயவைத்து, காய்ந்தபின் நன்றாக பொடித்து எடுத்து பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். காலை மாலை இருவேளையும் இதில் அரை தேக்கரண்டி அளவு வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால் பித்தம் குறையும்.
உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும்
எலுமிச்சம் பழச் சாறை உடலில் தேய்த்து குளித்தால் உடல் வறட்சி நீங்கி உடல் நறுமணத்துடன் புத்துணர்வு பெறும். எலுமிச்சை பழச்சாற்றைத் தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்து பின்னர் குளிக்க வேண்டும்.
வயிற்று வலி மற்றும் நெஞ்செரிச்சல் குணமாகும்
உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை உடையவர்கள், நீரிழிவு வியாதியால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு எலுமிச்சை பழச்சாறு குடித்து வரலாம். இது வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை குணமாக்கும்.
மயக்கம் குணமாகும்
சீரகத்தை எலுமிச்சை சாற்றில் ஊறவைத்து பின்பு உலர்த்தி, சூரணம் செய்து 5 கிராம் அளவு கொடுத்து வர 48 நாளில் பைத்தியம் குணமாகும். பிதற்றல், மயக்கம் போன்றவை தீரும்.
மாதவிலக்கினால் ஏற்படும் வலியை குறைக்கும்
பெண்கள் மாத மாதம் ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனையால் மிகவும் பாதிக்கபடுகிறார்கள். அந்த சமயங்களில் அடிவயிற்று வலி அதிகமாக இருக்கும். அந்த சமயங்களில் எலுமிச்சை கொண்டு செய்யப்பட்ட உணவு மற்றும் பானங்களை எடுத்து கொண்டால் மாதவிலக்கின் போது உண்டாகும் வலி குறையும்.
பற்கள் ஆரோக்கியமாகும், வாய் துர்நாற்றம் நீங்கும்
பற்கள் ஆரோக்கியம், வாய் துர்நாற்றம் நீங்க எலுமிச்சை பழத்தை பயன்படுத்தலாம். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் மனிதர்களின் உடலில் தீங்கு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள், கிருமிகளை அழிக்கும். பற்கள் மற்றும் ஈறுகளில் சொத்தை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இளஞ்சூடான நீரில் எலுமிச்சை பழச்சாறு கலந்து, காலை மற்றும் மாலை வேளைகளில் வாய் கொப்பளித்து வந்தால் பற்கள் மற்றும் ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகள் குணமாகும்.
குறிப்பு
1. எலுமிச்சை அதிகமாக உட்கொண்டால் பற்களின் எனாமல் அரிக்கப்படும். இதனால் பல் கூச்சம் ஏற்படும். நாளைடைவில் பற்களையே இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.
2. எலுமிச்சம் பழச்சாற்றை அளவோடு மருந்து போல தான் பயன்படுத்த வேண்டும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலானது எலும்புச் சத்தை இழந்து விடும். விந்து நீர்த்து விடும். உடலில் உள்ள தாதுவின் அளவு குறையும்.