1. Home
  2. ஆரோக்கியம்

வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும் உணவுகளை கோடையில் தவிர்ப்போம்...

வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும் உணவுகளை கோடையில் தவிர்ப்போம்...

உணவே மருந்து என்ற காலமெல்லாம் கடந்து மருந்தே உணவு என்ற காலகட்டத்தில் தற்போது நாம் வாழ்ந்து வருகிறோம். ஆனாலும் கலர் கலர் உணவுகளும், புளிப்பும் இனிப்பும் கலந்த கார உணவுகளும், எண்ணெயில் பொறித்த மொறு மொறு பண்டங்களும் பார்த்ததும் நாக்கில் எச்சில் ஊறத்தான் செய்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளில் மயங்கித்தான் கிடக்கிறோம்.

மைதா போன்ற பொருள்களில் செய்யப்படும் சாட் வகைகளை பெரும்பாலான நாடுகள் தடை செய்துவிட்டன. நமது பக்கத்து மாநிலமான கேரளாவிலும் மைதாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மைதாவில் செய்த உணவுபொருள்கள் நாவுக்கு சுவையூட்டினாலும் வயிற்றுக்கு அதிக கெடுதலையே தருகிறது. மலச்சிக்கல் பிரச்னையை உண்டாக்குவதில் பெரும்பங்கு வகிக்கும் மைதாவில் செய்த உணவு பொருள்கள் கோடையில் மேலும் சிக்கலை உண்டாக்கிவிடுகிறது.

எப்போதாவது என்றால் சரி.. ஆனால் அடிக்கடி இந்த உணவுதான் ஃபேவரிட் என்று மல்லுக்கட்டினால் விளைவுகள் விபரீதமாகும். அதிலும் கோடைக் காலங்களில் கேட்கவே வேண்டாம். செரிமானப் பிரச்னைகள் தலைதூக்கும், வயிற்றில் எரிச்சல் உண்டாகும். தொண்டைக்குழாய் பாதிப்படையும், நெஞ்சு எரிச்சல் உண்டாகும்... காரமிக்க உணவுகளும் நீர் பற்றாக்குறையும் இணைந்து உடல் உஷ்ணத்தை இரட்டிப்பாக்கிவிடும்.

பெண்கள் பாடு படு திண்டாட்டம்தான். போதிய நீரை எடுத்துக்கொள்ளாமல் உடல் உஷ்ணம் அதிகமாகி பாதிப்பை உண்டாக்கும். இதை தொடர்ந்து கவனிக்காமல் இருக்கும் பட்சத்தில் சிறுநீர்ப்பாதையில் தொற்றுகளை உண்டாக்கும் அபாயமும் உண்டு.

வெளியில் மட்டுமல்ல வீட்டிலும் மசாலாக்கள் நிறைந்த உணவுகள், புளி, காரம், எண்ணெயில் பொறித்த வறுத்த உணவுகள் உடலுக்கு கெடுதலை துரிதமாகவே உண்டாக்கும். அசைவபிரியர்கள் கோடையில் சந்திக்கும் முக்கிய பிரச்னைகள் செரிமானமின்மையால் ஏற்படும் வயிற்று வலி, உப்புசம், காரம் மிக்க உணவால் ஏற்படும் வயிறு வலி போன்றவைகள்.

பொதுவாகவே உணவு சமைக்கும் போது பச்சை மிளகாயைத் தவிர்த்து வரமிளகாய், மிளகு பயன் படுத்துவது நல்லது என்று சொல்வார்கள். கோடைக்காலத்திலாவது இயன்ற வரை வெளியில் சாப்பிடுவதை விடுத்து வீட்டில் சாப்பிடுங்கள். தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியில் சாப்பிட நேர்ந்தால் மிதமான உணவுகள் தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

சாலையில் தள்ளுவண்டியில் கிடைக்கும் தரமான கூழ் வகைகள், மோர், நுங்கு, இளநீர், நீர் மோர் போன்றவை கோடையில் வயிற்று எரிச்சலிலிருந்து காப்பாற்றி குளுமையாக வைக்கும் என்பதால் முடிந்த அளவிற்கு இதுபோன்ற உணவு மற்றும் பானங்களை வாங்கி பருகுங்கள்.

newstm.in


newstm.in

Trending News

Latest News

You May Like