1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? இந்த கீரையை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு வாய்ப் புண் வராது..!

1

தினமும் ஒவ்வொரு கீரையைச் சேர்த்துக்கொண்டால், உடலுக்குத் தேவையான எல்லா வைட்டமின்களும் தாதுக்களும் கிடைத்துவிடும். அதேநேரம், கீரைகளில் அதிக நார்ச்சத்து உள்ளதால், செரிமானமடைய நேரம் ஆகும். இதனால், இரவில் கீரை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். கீரை சாப்பிட்டதும் நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். 

சிறுநீரகப் பிரச்சினை அல்லது கௌவுட் (Gout) போன்ற மூட்டுவாதப் பிரச்சினை உள்ளவர்களுக்கு ஆகாது. அவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி கீரைகளைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும்.

சில முக்கியமான கீரைகளில் என்ன சத்து உள்ளது:

பசலைக் கீரை

இது ‘கீரைகளின் அரசன்’ என அழைக்கப்படுகிறது. காரணம், குறைந்த அளவில் இருந்தாலும் பல சத்துகளைக் கொண்ட கீரை இது. வைட்டமின் ஏ, சி, பி காம்ப்ளெக்ஸ், கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், அமினோஅமிலம் எனப் பல சத்துகள் நிறைந்த கீரை. இதைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு வாய்ப் புண் வராது. இரைப்பைப் புண் வராது. இது உடலுக்கு வலிமை தருகிறது. நோய்த் தொற்றைத் தடுக்கிறது. புற்றுநோயைத் தடுக்கும் குணமும் இதற்கு உண்டு. இதை அடிக்கடி சாப்பிடுபவர்களைச் சிறுநீரகப் பிரச்சினைகள் அண்டுவதற்கு அஞ்சும். பாலூட்டும் பெண்களுக்கு அற்புத உணவு இது.

முருங்கைக் கீரை

இதில் இரும்புச் சத்து, கால்சியம், நார்ச்சத்து, வைட்டமின் சி, பீட்டா கரோடின் ஆகியவை அதிகமாக உள்ளன. பொட்டாசியம், மெக்னீசியம், குரோமியம், தாமிரம், துத்தநாகம் போன்ற சத்துக்களும் இதில் தேவைக்கு உள்ளன. இது கண்களுக்கு மிக நல்லது. குறிப்பாக மாலைக்கண் நோயாளிகள் தினமும் இதைச் சாப்பிட்டுவர, நோய் குணமாகும். இது ரத்தசோகையைப் போக்க உதவுகிறது. எலும்பு வளர்ச்சிக்குத் துணை செய்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. இரைப்பைப் புண்ணைக் கட்டுப்படுத்துகிறது. இதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்குகிறது. இதய நோயாளிகள் தாராளமாக இதைச் சாப்பிடலாம்.

அரைக் கீரை

இதில் கால்சியமும் ‘வைட்டமின் சி’யும் அதிகம். பீட்டா கரோடின், நார்ச் சத்து ஓரளவுக்கு உள்ளது. இரும்புச் சத்து மிக அதிகம். ரத்தசோகை உள்ளவர்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் ஏற்ற உணவு இது. புரதம், கலோரிகள் குறைவாக இருப்பதால், உடற்பருமன், இதய நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோர் இதைத் தாராளமாகச் சாப்பிடலாம். இது உணவுச் செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது.

வெந்தயக் கீரை

இதில் வைட்டமின் ‘பி காம்ப்ளெக்ஸ்’ மிக அதிகமாக இருக்கிறது. இரும்புச் சத்தும் நார்ச் சத்தும் ஓரளவு இருக்கின்றன. கால்சியம், பீட்டா கரோடின் நிறைய இருக்கின்றன. தாமிரம், துத்தநாகம், மக்னீசியம், மாங்கனீஸ் ஆகியவை தேவைக்கு உள்ளன. பொட்டாசியம் குறைந்த அளவில் உள்ளது. இது பசியைத் தூண்டி செரிமானத்தை அதிகரிக்கிறது. இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும் பார்வைக் கோளாறுகள் உள்ளவர்களுக்கும் இது சிறந்ததொரு உணவு. இது மூளை நரம்புகளுக்கு நல்லது. சிறுநீரக நோயாளிகளுக்கு ஏற்ற கீரை.

அகத்திக் கீரை

கால்சியம் மிகுதியாக உள்ள கீரை இது. எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுவதால், வளரும் பருவத்தில் உள்ளவர்களுக்கு நல்லதொரு உணவு. கீரைகளில் அதிக ஆற்றல் தருவதும் இதுதான். பல மருத்துவக் குணங்கள் இந்தக் கீரைக்கு உண்டு. புரதமும் கார்போஹைட்ரேட்டும் ஓரளவுக்கு உள்ளன. இதில் பாஸ்பரஸ் அதிகம் என்பதால், பல் நலன் காக்க உதவுகிறது. வைட்டமின் ஏ சத்தும் இரும்புச் சத்தும் தேவைக்கு உள்ளன. கண்ணுக்கு நல்லது. இதைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு மாலைக்கண் நோய் குணமாகும். ரத்தசோகை நோயாளிகளுக்கு இது உதவும்.

மணத்தக்காளிக் கீரை

இதில் வைட்டமின் ‘பி காம்ப்ளெக்ஸ்’ அதிகமாக இருப்பதால் பொது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வாய்ப் புண்ணும் இரைப்பைப் புண்ணும் குணமாகும். இதில் ஓரளவுக்குப் புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச் சத்து, கால்சியம் ஆகியவை உள்ளன. ரத்தசோகை உள்ளவர்களுக்கு இது நல்லதொரு கீரை. வாரம் ஒருமுறையாவது குழந்தைகள் இதைச் சாப்பிட பழக்கப்படுத்திவிட வேண்டும்.

புதினா கீரை

செரிமானத்துக்கு ஏற்ற கீரை இது. எல்லா வயதினருக்கும் ஏற்றதும் இதுதான். சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைக்கும் பசியைத் தூண்டி, சாப்பிடவைக்கும். வைட்டமின் ஏ, சி, ரிபோஃபிளேவின், ஃபோலிக் அமிலம் ஆகிய சத்துக்கள் நிரம்பியுள்ளன. இரும்புச் சத்தும் நார்ச்சத்தும் தேவைக்கு உள்ளன. மக்னீசியம், மாங்கனீஸ், தாமிரம், துத்தநாகம், குரோமியம் எனப் பல தாதுக்கள் இதில் அடங்கியுள்ளன. ரத்தசோகையைப் போக்கவும் மலச்சிக்கல்லைத் தீர்க்கவும் இது உதவுகிறது. புதினாவில் ‘மென்தால்’ எனும் வேதிப்பொருள் உள்ளது, இது சளியும் தடுமமும் பிடிக்காமல் பார்த்துக்கொள்கிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.

Trending News

Latest News

You May Like