இது தெரியுமா ? அன்றாட உணவில் ராகியை பயன்படுத்தி வந்தால்...
வெயில் காலம் வந்து விட்டது இப்பொழுது வேற வழியே இல்லை ராகியை சேர்த்தே ஆக வேண்டும் இல்லையேல் உடல் வெப்பத்தால் பல உபாதைகளை சந்திக்க நேரிடும்.. சரி இதனை எவ்வாறு உணவில் சேர்த்துக்கொள்வது என்பதை பார்ப்போம்..
முதலில் ராகி நமக்கு வழங்கும் நன்மைகளை பார்க்கலாம்:
கோடை காலத்தில் ஏற்படும் உடல் சூட்டைத் தணித்து, உங்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். கோடையில் உடலின் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், இக்காலத்தில் ராகியை உணவில் சேர்த்து வந்தால், உடல் வெப்பமானது குறையும்.
கொலஸ்ட்ரால்: ராகி உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவையும் குறைக்கும். ராகியில் அதிக அளவில் லெசிதின் மற்றும் மெத்தியோனைன் , தீமையை உண்டாக்கும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. இதிலுள்ள அமினோ ஆசிடுகள், கல்லீரலில் தங்கியுள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலையும் கரைத்துவிடும். ராகி அதிக நார்ச்சத்து உள்ள உணவு என்பதால், நீண்ட நேரம் பசி தாங்கும் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க முடியும்.
ராகியில் உள்ள நார்ச்சத்து செரிமான சக்தியை மேம்படுத்துகிறது. வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகளை தடுக்க உதவுகிறது. உடலின் நீர்ச்சத்து குறையாமல் வைத்திருக்க உதவுகிறது. நார்ச்சத்து மலச்சிக்கலைத் தீர்க்கிறது.
ராகியில் அதிக அளவிலான இரும்புச்சத்து இருப்பதால் இது ரத்த அணுக்களின் அளவை அதிகரிக்கச் செய்து ரத்த சோகையை ஏற்படுத்துவதைத் தடுக்கிறது. வேலைப்பளு நிறைந்தவர்கள் ராகியை அதிகம் சாப்பிட மன அழுத்தத்திலிருந்தும் விடுபடலாம்.
ஹைப்போ தைராய்டு இருக்கின்றவர்கள் இந்த ராகியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது தைராய்டை சரிசெய்யும்.
பால் சுரப்பு பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இந்த ராகி மிக நல்லது. பால் கொடுக்கும் தாய்மார்கள் அடிக்கடி ராகியை உணவில் எடுத்துக் கொள்வதால், உடலுக்குள் இருக்கின்ற சிவப்பணுக்களின் அளவினை அதிகரிக்கும். பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்.
ராகி மாவில் மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் இருப்பதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மக்னீசியம் இதயத் துடிப்பு மற்றும் நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு உதவுகிறது. இரத்த அழுத்தம் மற்றும் இதய செயல்பாட்டிற்கும் ஏற்றது. இதில் உள்ள நார்ச்சத்து கல்லீரல் மற்றும் குறைவான கொழுப்புச் சத்து உடலுக்கும் ஏற்றது.
பால் இல்லாத பொருட்களில் அதிகளவு கால்சியம் உள்ளதென்றால் அது ராகி மட்டுமே. இதில் உள்ள கால்சியம் எலும்புகளை உருவாக்கவும் உறுதியாக வைத்திருக்க உதவும்.
அன்றாட உணவில் ராகியை பயன்படுத்தி வந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுகிறது. அரிசி மற்றும் கோதுமை போன்றவற்றைக் காட்டிலும் நார்ச்சத்தானது ராகியில் அதிகமாகவுள்ளது. அதிக நார்ச்சத்து சர்க்கரை அளவைக் குறைக்கிறது. கார்ப்போஹைட்ரேட் அதிகம் சாப்பிட வேண்டும் என்ற உணர்வை ராகியில் செய்யப்படும் உணவு குறைக்கிறது.
எளிதான ராகி சமையல்:கேழ்வரகு புட்டு:-
தேவையான பொருட்கள் :-
கேழ்வரகு மாவு
உப்பு: 3 சிட்டிகை
சர்க்கரை :- தேவையான அளவு
தேங்காய் துருவல் :- தேவையான அளவு
செய்முறை:-. கேழ்வரகு மாவில் உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்துக்கொள்ளவும். இட்லி தட்டில் துணிப்போட்டு, கட்டியில்லாமல் இட்லி தட்டில் போட வேண்டும். பின்னர் பாத்திரத்தில் வைத்து வேகவைத்து எடுத்து அதனுடன் தேங்காய் துறுவல், சர்க்கரை சேர்த்து பரிமாறவும்.