1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? தினமும் நாம் குடிக்கும் தண்ணீரில் சீரகத்தைக் கலந்து குடித்தால்...

1

சமையலறையில் ருசிக்கு மட்டுமே என்று அரைவேக்காடாய் கிடந்ததல்ல நம் முன்னோர்களின் பொருள்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித மூலிகையாய்.. பலவித சுவைகளில் தனித்து நம்மை செழிப்போடு வைத்திருந்தனர். மீண்டும் அத்தகைய வாழ்வுக்கு செல்ல தயாராகும் சூழ்நிலையில் மூலிகையில் ஒன்றான சீரகத்தை சேர்த்தால் அகமும்.. ஆரோக்யமும் சீராகும் என்பதை கண்கூடாக காணலாம்.

சீர்+ அகம்=சீரகம். அகத்தை சீர் செய்வதால் இதற்கு சீரகம் என்று பெயர். 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்களுக்கு அறிமுகமாகிய சீரகம் சீரான வாழ்க்கை வாழ உதவிபுரிகிறது. உடல் உள் உறுப்புகள் சீராக இயங்கினாலே நோய் வருவதற்கு சாத்தியமில்லை. அந்த உறுப்புகளைச் சத்தமின்றி சீராக இயக்க சீரகம் பயன்படுகிறது. மிளகுடன் இணைந்து காணப்படும் சீரகத்தை ரசத்திலும்...

தாளிப்பிலும் பயன்படுத்துவோம். ஆனால் தினமும் நாம் குடிக்கும் தண்ணீரில் சீரகத்தைக் கலந்து குடித்தாலே அளவில்லா பயன்களை பெறலாம். என்ன சத்து இல்லை இந்த சீரகத்தில் .... என்று கேட்க கூடிய அளவுக்கு சீரகம் சிறந்து இருக்கிறது. அஜீரணக்கோளாறு இருக்கிறதா சீரகத்தை தண்ணீரில் கலந்து குடியுங்கள். மாத்திரைகளின்றி மலச்சிக்கலை ஒழிக்க சீரகத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் உதவி புரியும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க சீரகம் உதவுகிறது. சீரகத்தில் உள்ள பொட்டாசியம் உயர் இரத்த அழுத்த பிரச்னையைச் சீராக வைத்திருக்கிறது. இரத்த உற்பத்திக்கு தேவையான இரும்புச்சத்தை சீரகம் அளிக்கிறது. சுவாசக் குழாயில் உள்ள நோய்க்கிருமிகளை விரட்டியடிக்க மாத்திரையை விட சீரகமே சிறப்பாக பணிபுரிகிறது. பித்தம், வாயுக்கள் சம்பந்தமான நோய்கள் தங்களை நெருங்கவிடாமல் இருக்க சீரகத்தைப் பயன்படுத்தினார்கள் நம் முன்னோர்கள்.ஆரோக்யத்தோடு அழகையும் பொலிவையும் சரும மினுமினுப்பையும் பெற்று என்றும் இளமையுடன் ஜொலிக்க கூட சீரகத்தில் உள்ள வைட்டமின் ஈ உதவுகிறது.

பாக்கெட்டை கொண்டு வந்து வேக வைத்தாலே உணவாகிவிடும் இக்காலத்தில் தாளிப்பு ஒன்றே மறந்துபோகும் நிலையில் இருக்கிறோம். தாளிக்காத உணவே பிரதான உணவாக இருக்கும்போது தாளிக்கும் உணவை சமயங்களில் தேடுகிறோம் என்பதை வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருப்பவர்கள் தெளிவாக சொல்வார்கள். பல்வேறு நோய்களுக்கு பலவித மாத்திரைகள் என்று ஓடாமல் பல நோய்களை ஆரம்பத்திலேயே விரட்டியடிக்க சீரகம் ஒன்று போதும். காலையில் வெறும் வயிற்றில் சீரகத்தண்ணீர் குடிப்பதில் தொடங்கி... இரவு வரை தாகம் எடுக்கும் போதெல்லாம் சீரகத்தண்ணீரை மட்டுமே எடுத்துக்கொள்ளுங்கள்... வயது ஆனாலும் இளமையின் துள்ளலோடு வலம் வர சீரகம் போதும். சீக்கிரம் சீரகத்தண்ணீருக்கு மாறுங்கள்.

  • செரிமான பிரச்சனைகள் இருந்தால் சீரகத் தண்ணீரை குடிப்பதால் உடனடியான நிவாரணம் கிடைக்கும். சீரகத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது. 
  • நோய் எதிர்ப்பு சக்தியை சீராக பராமரிக்க சீரக நீர் குடிக்க வேண்டியது அவசியம். உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும். மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வழிவகுக்கும். சீரக நீர் சுவாச கட்டமைப்புக்கும் நன்மை சேர்க்கும். சளியை குணப்படுத்தவும் உதவும்.
  • உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் சீரக நீரை குடித்தால் அதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக  வைத்திருக்க உதவுகிறது.
  • சீரகத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. அது ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. வளர்சிதை மாற்றத்துக்கும் வலுசேர்க்கும். சீரக நீர் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது. மற்றும் பித்தப்பைக்கும் பாதுகாப்பு அளிக்கும்.  கல்லீரலும் பலம் பெறும். உடல் ஆரோக்கியத்துக்கு இரும்பு சத்து மிக அவசியம். 
  • இரும்பு சத்து குறைபாட்டையும் சீரக நீர் சீர் செய்யும். மாதவிடாய் காலத்தில் வலி நிவாரணியாகவும் விளங்குகிறது. அந்த  சமயத்தில் சீரக நீர் பருகுவதன் மூலம் வலி கட்டுப்படும். சரும பளபளப்புக்கும் சீரக நீரை பயன்படுத்தலாம். அதில்  பொட்டாசியம் மட்டுமின்றி கால்சியம், செலினியம், மாங்கனீஸ் உள்ளிட்டவை இருக்கின்றன. அவை தோலுக்கு புத்துணர்ச்சி  கொடுக்கிறது.
  • சீரகத்தில் உள்ள இரும்பு சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து உடலில் இரத்தசோகையை குணப்படுத்தும். சளி பிரச்சனை, சுவாசக் குழாயில் உள்ள நோய்க் கிருமிகள் அழிந்து சளி மற்றும் இருமலில் இருந்து உடனடி நிவாரணம்  கிடைக்கும். தொடர்ந்து இந்த நீரைக் குடித்து வருவதால் ஞாபக சக்தி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யலாம். 
  • சீரக நீருடன் மஞ்சள் தூளை கலந்து முகத்தை கழுவினால், முகம் பளபளக்கும். சருமம் மென்மையாக, மிருதுவாகவும் இருக்கும். சீரகத்தில் உள்ல வைட்டமின் ஈ சத்து இளமையை தக்கவைக்க உதவும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கூந்தலை  வலுவாக்குவதோடு. முடியின்வேர்கள் வளர்வதற்கு உதவும். முடி உதிர்தலை தடுக்கும்.
  • கோடைக்காலத்தில் அதிகமாக வியர்க்கும்போது அதிகளவில் பொட்டாசியம் வெளியேறும். சீரக தண்ணீரை பருகுவதன் மூலம் அதனை ஈடு செய்யலாம்.
  • குடல் பிரச்னை உள்ளவர்கள் சீரகத் தண்ணீர் குடிப்பதன் மூலம் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்
  • சீரகம் -2 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். அதனை, எண்ணெய் விடாமல் வெறுமனே வறுத்துப் பொரிந்ததும், அடுப்பை அணைத்து அதே சூடான சட்டியில் 2 ஸ்பூன் தேனை விடவும். அப்போது சீரகம் பொங்கும். அந்த நேரத்தில், 200 மிலி தண்ணீரை ஊற்றி மீண்டும் அடுப்பை பற்றவைத்து, 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி வடித்து, இளம் சூட்டில், 1/2 எலுமிச்சை சாறு பிழிந்து கலந்து குடிக்கவும். இதன் மூலம் பேதி நிற்கும். தேவைப்பட்டால் 2 அல்லது 3 முறை குடிக்க, சூட்டினால் வரும் பேதி நிற்கும்.

சிறுநீரகப் பிரச்னை, சிறுநீரகத்தில் நாள்பட்ட அல்லது குறைந்தளவு பாதிப்பு உள்ளவர்கள், சீரகத் தண்ணீரை பருகக் கூடாது.

Trending News

Latest News

You May Like