1. Home
  2. ஆரோக்கியம்

மாங்காயால் மசக்கை பெண்கள் பாதிக்கப்படுகிறார்களா?

மாங்காயால் மசக்கை பெண்கள் பாதிக்கப்படுகிறார்களா?

மாங்காயை நறுக்கி துண்டங்களாக்கி இலேசான உப்பும் மிதமான காரமும் கலந்து தெளிக்கப்பட்ட துண்டங்களைப் பார்த்தாலே வாயில் உமிழ்நீர் சுரக்கும். நாவில் புளிப்புதன்மை கூடும். எல்லோரையும் விட மசக்கை பெண்களுக்கு அதிகம் பிடித்த பொருள் புளிப்பு மாங்காய்.

கர்ப்பகாலத்தில் சத்தான பொருள்களைச் சாப்பிட்டால் தான் தாயும் சேயும் ஆரோக்யமாக இருப்பார்கள். அனைத்து சத்துக்களும் சமச்சீராக இருக்க வேண்டும் என்று மருத்துவர்களும் சொல்கிறார்கள். பொதுவாக கர்ப்பகாலத்தின் துவக்கத்தில் பெண்களுக்கு வாந்தி உணர்வு உண்டாகும். குறிப்பாக சமைக்கும் போது பருப்பு வாசனை, சோறு கொதிக்கும் வாசனை போன்றவையெல்லாம் வாந்தி உணர்வை அதிகப்படுத்தும். ஆனால் புளிப்புச் சுவையுள்ள மாங்காய் வாந்தி உணர்வைக் கட்டுப்படுத்தும். உடல் சோர்வை நீக்கும்.

மாங்காயில் வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. கால்சியம், சுக்ரோஸ், பைபர், இரும்பு, மக்னீஷியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, சி, வைட்டமின் பி12, வைட்டமின் பி3, வைட்டமின் பி 5, புரோட்டின், தயமின் போன்ற சத்துக்கள் உள்ளடங்கியிருக்கிறது.

வெப்பம் மிக்க காலங்களில் இது விளைவதால் மாங்காய் உடலில் வெப்பத்தை அதிகரிக்கும் என்ற தவறான கருத்தைச் சிலர் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மாங்காயின் உட்புறம் சக்தி வாய்ந்த குளிர்மிக்க உட்பொருள் இருக்கிறது. இது கோடையில் நீர்ச்சத்துக்குறைபாட்டை சரிசெய்யும் என்கிறார்கள். பச்சை மாங்காய் செரிமான மண்டலத்தைத் தூண்டி ஜீரண சக்தியை எளிதாக்குகிறது. நெஞ்செரிச்சல் பிரச்னை சரிசெய்வதில் மாங்காய் செயல்படுகிறது. மாங்காயின் குணங்கள் நம் உடலுக்கு வலு சேர்க்குமே தவிர ஊறு விளைவிக்காது. எப்படி சாப்பிட்டாலும் மாங்காயின் சத்து உடலுக்கு சேரும்.

மாங்காயை அப்படியே புளிப்புச் சுவையோடு ரசித்து சாப்பிடும் கர்ப்பிணிகள் போல் நம்மால் சாப்பிட முடியாது. அதனால் தான் மாங்காயில் விதவிதமாய் பச்சடி, இஞ்சி, பச்சை மிளகாய் கலந்த ஊறுகாய் என்று தயாரித்து சாப்பிடுகிறோம். உதாரணத்துக்கு எல்லோரும் விரும்பி சாப்பிடும் மாங்காய் சாதம் தயாரிக் கும் முறையைப் பார்க்கலாம்.

தேவைக்கு :

பச்சரி சாதம் - 2 கப், மாங்காய் துருவல் - 1 கப் (தோல் நீக்கி துருவிக்கொள்ள வேண் டும்) சிறுதுண்டுகளாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள்- 1 டீஸ்பூன், வர மிளகாய்- 4, தாளிக்க- கடுகு, உ.பருப்பு,க.பருப்பு தலா 3 டீஸ்பூன், நல்லெண் ணெய் - தேவைக்கு. கறிவேப்பிலை, கொத்துமல்லி- தேவைக்கு. பெருங்காயம் – 1 சிட்டிகை.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு தாளித்து வரமிளகாய் சேர்த்து துருவிய மாங்காய் சேர்த்து, உப்பு, ம.தூள் போட்டு வாசனை போக நன்றாக வதக்கவும். பிறகு அகன்ற பாத்திரத்தில் உதிர் உதிராக வடித்த சாதத்தை போட்டு மாங்காய் விழுதைச் சேர்த்து கலந்து கறிவேப்பிலை, கொத்துமல்லி தூவிபரிமாறவும். கொஞ்சம் புளிப்பு, கொஞ்சம் காரம், கொஞ்சம் உப்பு கலந்து சுவையிலும் அருமையாக இருக்கும். கர்ப்பிணிகள் பச்சை மாங்காய் சாப்பிடுவதை விட மாங்காய் சாதம் சாப்பிடலாம். வாந்தி உணர்வு வராது.

அமிர்தமும் நஞ்சு என்பதால் சத்துமிக்கது என்று மாங்காயை மட்டுமே அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லதல்ல. அதிகளவு மாங்காய் உடல் உஷ்ணத்தை கிளப்பி வயிறுவலியை உண்டாக்கிவிடும் என்கிறார்கள். மசக்கை பெண்கள் மாங்காய் புளிப்பா.. வாய் புளிப்பா என்று தெரியாமல் இருந்தாலும் புளிப்பு மிக்க குறைந்த அளவு மாங்காயே அவர்களுக்கு போதுமானதாகிவிடுகிறது என்பதால் மாங்காயால் மசக்கை பெண்கள் பாதிப்படைவதில்லை என்பதே அனுபவமிக்கவர்களின் கருத்து.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like