இந்த இனிப்பு கொழுக்கட்டை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்..!

தினை மாவு இனிப்பு பிடி கொழுக்கட்டை : தேவையான பொருட்கள்: தினை மாவு, வெல்லம், தேங்காய், சுக்கு, உப்பு, ஏலக்காய், முந்திரி பருப்பு, நெய்.
செய்முறை: 1 கப் தினை மாவை லேசாக வெறும் வாணலில் வறுத்து எடுத்துக்கொள்ளவும். அத்துடன், முக்கால் கப் வெல்லம் சேர்த்து, ஒரு சிட்டிகை உப்பு, கால் ஸ்பூன் சுக்கு பொடி, சிறிதளவு தேங்காய் பற்கள், தேவையான அளவு நெய், வறுத்த முந்திரி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.
தேவைக்கேற்ப வெதுவெதுப்பான நீர் சேர்த்து, பிடித்தால் பிடித்த படியும், விட்டால் உதிரும்படியுமான பதத்தில் தயார் செய்யவும். அதன் பின், அந்த கலவையை கையில் பிடித்து, ஆவியில் வேகவைத்து இறக்கவும். அவ்வளவுதான் சூடான, சுவையான தினை இனிப்பு பிடி கொழுக்கட்டை தயார்.
உங்கள் வீட்டு பிள்ளையாருக்கு நெய்வேத்யம் செய்துவிட்டு, எல்லோரும் சுவைத்து மகிழுங்கள்.
இந்த விநாயகர் சதுர்த்திக்கு வழக்கமான கொழுக்கட்டைக்கு பதில், சிறியவர் முதல் முதியவர் வரை அனைவருக்கும் உடல் நலத்திற்கு ஏற்ற சிறுதானிய கொழுக்கட்டை செய்து விநாயகருக்கு நெய்வேத்யம் செய்து நாமும் சாப்பிட்டு சுவையுடன் கூடிய உடல் நலத்தையும் பெறுவோம்.