1. Home
  2. ஆரோக்கியம்

உங்கள் வாழ்க்கையில் இருக்கும் நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்!

உங்கள் வாழ்க்கையில் இருக்கும் நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்!

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தான் எத்தனை பிரச்னைகள்? ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டம். வீட்டில் நிம்மதி இல்லை என்று வெளியே வந்தால் வெளியில் அதற்கு மேல் ஆயிரம் இடர்கள். நேர்மறை எண்ணங்களுடன் இருந்தால், எத்தகைய பிரச்னையாக இருந்தாலும் சமாளித்து மீண்டு வரலாம்.

தொடர்ந்து நெகட்டிவ் எண்ணங்கள் மனத்தை நச்சரித்தால் என்ன செய்வது? மனம் நமக்கு வெளியே இருந்தால் கூட தப்பித்து ஓடலாம். ஆனால் நமக்குள்ளேயே இருந்து நம்மை பலவிதமாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறதே! மனம் நிலைகொள்ளாமல் தவிக்கும் போது உள்ளுக்குள் ஆழமான ஒரு காயத்தால் ஏற்பட்ட வலி சற்றும் குறையாமல் இருக்கும் போது என்ன செய்யலாம்? பாசிட்டிவ்வாக இருக்க பின்வரும் 5 வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் எதுவும் எளிதாகும்.


உங்கள் வாழ்க்கையில் இருக்கும் நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்!

மனதை திசை திருப்புங்கள்:

நமக்குத் தெரியாமலேயே சிறுகச் சிறுக எதிர்மறை எண்ணங்களை வளர விட்டிருப்போம். ANT என்று சுறுக்கமாகச் சொல்லப்பட்டு Automatic Negative Thoughts தான் அவை. அதை ஆரம்பத்திலேயே தடுத்துவிட வேண்டும் இல்லை எனில் ஆக்டோபஸ் கரங்கள் கொண்டு நம்மை ஆக்ரமித்திருக்கும். இந்நிலையில் மனத்தை துயர் அடையச் செய்யும் பழைய எண்ணங்கள் மீண்டும் மீண்டும் நம்மை அறியாமல் மேல் எழும்பி வரும். அதிலிருந்து தப்பிக்க, நீங்கள் என்ன சொன்னாலும் காது கொடுத்துக் கேட்க கூடிய நெருங்கிய நண்பரோ உறவினரோ இருந்தால் அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். வளர்ப்புப் பிராணி வீட்டில் இருந்தால் அவற்றுடன் அதிக நேரம் செலவிடுங்கள். உடற்பயிற்சி அல்லது பூங்காவிற்குச் சென்று நடைபயிற்சி செய்யத் தொடங்குங்கள். புது வகையான உணவை சமைத்து சாப்பிடுங்கள். புதிய எந்த விஷயத்தையாவது கற்றுக் கொள்ளுங்கள். அல்லது உங்களால் முடிந்தால் மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுங்கள். மால்கள் அல்லது கடைகளுக்குச் சென்று உங்களுக்கு பிடித்தமானவற்றை வாங்கிக் குவியுங்கள். இனிப்பு பலகாரங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பழைய நினைவுகள் காலப்போக்கில் மறையத் தொடங்கி மனத்தில் உற்சாகம் மீண்டும் வரும்.

உங்கள் வாழ்க்கையில் இருக்கும் நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்!

சும்மா இருக்காதீர்கள்:

பிரிவு, துரோகம், இழப்பு, மரணம், துக்கம் இவையெல்லாம் எதிர்பாராது வருபவை. இவை தவிர்த்து மனித வாழ்க்கை இல்லை. மரணம் இல்லாத வீட்டிலிருந்து ஒரு பிடி கடுகு வாங்கி வா, உன் மகனின் உயிரை மீட்டுத் தருகிறேன் என்று பெற்ற மகனைப் பறி கொடுத்த தாயிடம் புத்தர் சொல்வார். அதெப்படி சாத்தியம்? எனவே உணர்ச்சிகளை மேலெழுப்பும் நிகழ்வுகளில் மனத்தை தளர விடாதீர்கள். எதிர்மறை எண்ணங்கள் மனத்தை ஆக்கிரமிக்கும் சமயங்களில் அதிலே உழன்று கொண்டிருக்காமல் மீள என்ன வழி என்று யோசிக்க தொடங்குகள். அதை எதிர்த்து போராடிக் கொண்டிருந்தால் இன்னும் வலி அதிகரிக்கும். காலப்போக்கில் காயங்கள் மாறிவிடும். எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருந்தால் மனம் துருப் பிடித்துவிடும். நாளாவட்டத்தில் கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டுவிடும். எனவே இதைத் தவிர்க்க உங்களுக்கு ஆர்வமான விஷயங்களில் ஈடுபடுங்கள். புத்தகங்கள் படிப்பது, நகைச்சுவை நிகழ்ச்சிகளைப் பார்ப்பது, அல்லது வண்டி ஓட்டுவது என உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு விஷயத்தில் ஆர்வம் செலுத்தி உங்களை நீங்களே தற்காலிகமாக காத்துக் கொள்ளுங்கள். அதன் பின் மெல்ல அந்நிலை மாறும். உங்கள் மனது ஓரளவுக்குச் சமாதானம் ஆகும்.


உங்கள் வாழ்க்கையில் இருக்கும் நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்!

பயணம் செய்யுங்கள்:

மனத்துக்கு மகிழ்வளிக்கும் சில விஷயங்களுள் ஒன்று இயற்கையுடன் சற்று நேரம் மனம் கலந்திருப்பதுதான். அருவி, மலைச் சாரல், கடல், தொன்மையான கட்டிடங்கள், கோவில் கோபுரங்கள், ஸ்தூபிகள் அழகியல் விஷயங்களில் ஈடுபடுகையில் மனம் எதிர்மறையாகச் செல்லாமல் நேராக இயங்கும். நம்மை மீறிய சக்தியான இயற்கையை தரிசிக்கும் போது மனித வாழ்க்கை எவ்வளவு குறுகியது என்று நினைத்து வாழும் காலம் வரை வாழ்க்கையை இனிமையாக கழிக்கத் தோன்றும். பயணம் மனத்தை விசாலமாக்கும். எண்ணங்களை விரிவடையச் செய்யும். குறிப்பிட்ட வாழ்நிலை சூழல்களில் சலித்துப் போன மனத்துக்கு ஒத்தடம் அளித்து மீண்டும் உற்சாகமாக பயணம் செய்ய ஊக்கம் தரும்.


உங்கள் வாழ்க்கையில் இருக்கும் நெகடிவ் எண்ணங்களை விரட்ட 5 வழிகள்!

உடனே அழித்துவிடுங்கள்!

எதிர்மறை எண்ணங்களை போக்குவது துணியைத் துவைத்து காய வைப்பது போல் அத்தனை சுலபமானது அல்ல. ஆனால் துணியில் ஏற்பட்ட கறை நன்றாக துவைத்த பின் சுத்தமாவதைப் போல மனத்தையும் தெளிவாக்க முடியும். இது சற்று பழைய வழக்கம் தான். ஆனால் முயற்சித்துப் பாருங்கள். ஒரு வெள்ளைத் தாளை எடுத்து உங்கள் மனத்தை கஷ்டப்படுத்தும் விஷயங்களை வரிசையாக எழுதுங்கள். அதன் பின் அந்த பேப்பரை எரித்து சாம்பலாக்கிவிடுங்கள். அல்லது ஒரு வொய்ட் போர்ட்டில் இதை எழுதி அழித்துவிடுங்கள். நானே நொந்து போயிருக்கேன், என்னால முடியாது போன்ற எதிர்மறைச் சொற்களை மனத்திலிருந்து அழித்துவிடுங்கள். உள்ளே உறைந்து கிடக்கும் குப்பையான நினைவுகளை வேறெப்படி நீக்குவது? இப்படி புறத்தில் அவற்றை அழித்துப் பழிகினால் நாளாவட்டத்தில் அகத்திலும் துயர் நீங்கி மனம் புத்துயிர் பெறும்.தினமும் யோகா அல்லது தியானம் செய்யத் தொடங்கினால் எதிர்காலத்தில் இது போன்ற எந்த பிரச்னை ஏற்பட்டாலும் எவ்வித தன்முனைப்பும் இன்றி எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் ஏற்படும்.

அதை ஒரு பாடமாக ஏற்றுக் கொள்ளுங்கள்:

சிந்தனையாளர் நீட்சே சொல்வது போல, ’எது நம்மை கொல்லாமல் விடுகிறதோ அது நம்மை பலமானவர்களாக்கிவிடுகிறது’ மேற்சொன்ன எந்த விஷயமும் உங்கள் துயரிலிருந்தோ மனக் குழப்பத்திலிருந்தோ அல்லது வேறு எந்த எதிர்மறை சிந்தனைகளிலிருந்தும் உங்களை காப்பாற்ற முடியவில்லை என்றால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நம்புங்கள். அது தற்காலிகமானது தான். அது கடந்து போகக் கூடியதுதான். எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு பிரச்னை என்று உடைந்து போகக் கூடாது. காரணம் அது நமக்கு ஏதோ ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே வந்துள்ளது என்று நினைத்துக் கொள்ளுங்கள். இதுவே நேர்மறை எண்ணத்துக்கான முதல் படி.ஒவ்வொரு நாளும் கடவுள் நமக்குக் கொடுத்த வரம். ஆலிஸ் அண்ட் டேவிட் என்ற மலையாளத் திரைப்படத்தில் ஒரு காட்சி. டேவிட் விபத்தில் சிக்கி கோமாவில் இருக்கும் சமயத்தில் அவன் மனத்துக்குள் ஆழமான கற்பனை காட்சிகள் தோன்றும். அதில் அவனை இறுதி யாத்திரைக்கு அழைத்துச் செல்ல கடவுளின் பிரதிநியான பீட்டர் வந்திருப்பார். பீட்டர் அவனிடம் பாவ புண்ணியக் கணக்குகளையும் அதுநாள் வரை அவன் செய்த பிழைகள் சிலவற்றையும் சுட்டிக் காட்டுவார். ஒரு மனிதன் வாழும் நாட்கள் குறைந்தது 60 வயது வரை என்று கணக்கிட்டுப் பார்த்தால் அதில் பாதி நேரம் அவன் உறங்குவதற்கும், பல மணி நேரங்கள் சாப்பிடவும் வேலை செய்யவும் போய்விட எஞ்சி இருக்கும் குறைந்த நேரத்தில் தன்னைப் பற்றியும் தான் செய்த தவறுகளை அல்லது செய்யத் தவறிய சரிகளைப் பற்றி நினைத்து ஆலோசிக்க அவனுக்கு எங்கே நேரம் இருந்திருக்கிறது? என்று கேட்பார். உண்மையில் நமக்கு கிடைத்த வரமாகிய இந்த வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் சரியாக வாழ்ந்துவிட்டால், விழிப்புணர்வுடன் இருந்தால் ஒருபோதும் நம்மை எவ்வித எதிர்மறை எண்ணங்களும் அருகே வராது.நமக்கான வரங்களை கேட்டு வாங்கிக் கொள்ளவே வாழ்க்கை, சாபங்களை வரவேற்காமல் சந்தோஷங்களுக்கு வழி அமைப்போம். நம்முடைய உள் மனத்தின் அமைதிக்கான சாவி வேறெங்கும் இல்லை, நம் கைகளில் தான் உள்ளது. திறப்பதும், மறுப்பதும் நம் விருப்பம்.",

Trending News

Latest News

You May Like