நித்தியானந்தா எங்கே இருக்கிறார்? நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பதை டிசம்பர் 12ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என கர்நாடகா மாநில காவல்துறைக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தன்னை பரமசிவன் நேரடியாக பாதுகாத்து வருவதாக கூறி வரும் நித்யானந்தா, நான் நெருப்பு ஆற்றில் நீந்துபவன் அல்ல, நெருப்பாற்றே நான் தான். என்னை எதுவும் செய்யமுடியாது என அடுத்தடுத்து வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். மேலும் கைலாசா என்ற தனி நாடு உருவாக்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே அவர் மீது பலர் பாலியல் தொடர்பான வழக்குகள் தொடர்ந்துள்ளனர்.
அந்த வகையில், ஆசிரமத்தில் வைத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நித்யானந்தா மீது ஆர்த்தி ராவ் என்பவர் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் கர்நாடக சிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கின் விசாரணை ராம்நகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே லெனின் கருப்பன் என்பவர் நித்யானந்தா மீது ராம்நகர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் நித்தியானந்தாவை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட வேண்டும் என்றும் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றம் வந்தப்போது, நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பதை காவல்துறையும், அரசும் கண்டுபிடித்து அதை வரும் 12ஆம் தேதிக்குள் நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
newstm.in