திமிங்கலத்தின் கழிவுக்கு இவ்வளவு மவுசா..! பல லட்சம் மதிப்புள்ள கழிவு பறிமுதல்
கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் கடற்கரையோரம் வனத்துறைக்கு சொந்தமான சவுக்கு தோப்பில் வெள்ளை நிறத்தில் ஒரு பொருள் விசித்திரமாக கிடப்பதை அப்பகுதி மீனவர்கள் கண்டனர். இதனையடுத்து அங்கு ஏராளமான மீனவர்கள் திரண்ட நிலையில் அதனை எடுத்த சிலர் கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் அது ஆம்பர் கிரீஸ் எனப்படும் திமிங்கலத்தின் வாந்தி (கழிவு) என்பது தெரியவந்தது.
இந்த கழிவானது, வைரத்தை பளபளப்பாக்க உதவும். மேலும் மருத்துவ குணங்களையும் கொண்டது என கூறப்படுகிறது. இது கடலில் மிதந்து வந்து கரை ஒதுங்கியிருக்கலாம் என தெரியவந்தது. பின்னர் அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். 5.88 கிலோ எடைகொண்ட அம்பர் கிரீஸின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. எனினும் சரியான மதிப்பு தெரியவரவில்லை. பின்னர் வனத்துறை அலுவலர்கள் அதை முறைப்படி சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
newstm.in