தடுமாறிய ஓட்டுநர்.. பற்றி எரிந்த பேருந்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்..!
உத்தரப்பிரதேசத்தின் ஃபருக்காபாத்தில் இருந்து ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நோக்கி 45 பயணிகளுடன் சொகுசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கணோஜ் மாவட்டத்தில் உள்ள சிலோய் பகுதியில் பேருந்து எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் பேருந்து மற்றும் லாரி தீப்பிடித்து எரிந்தது. பயணிகள் அனைவரும் கூச்சலிட்டவாறு வெளியே முயன்றனர். எனினும் பலர் வெளியேற முடியாமல் பேருந்தில் சிக்கி தவித்தனர். சிலர் பேருந்தில் ஜன்னல் இருந்து குதித்து தப்பினர்.
இதனிடையே தகவல் அடிப்படையில் வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். எனினும் இந்த விபத்தில் 20 பேர் வரை உயிரிழந்திருப்பதாக கணோஜ் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால் உயிரிழந்தவர்களில் விவரங்கள் பற்றிய முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. மேலும் 21 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பலரது நிலைமை மோசமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பேருந்தினுள் சில பயணிகள் சிக்கியுள்ளனர். கன்னோஜ் மற்றும் மனிப்பூர் ஆகிய இடங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. ஓட்டுநர் தன் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறியதாலேயே விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
newstm.in