மதுராந்தகம் ஏரி உடையும் ஆபத்து! அலட்சியத்தில் அரசு!
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழைப் பரவலாக பெய்து வந்த நிலையில், சென்னையிலும் சமீப நாட்களாக இரவு நேரங்களில் நல்ல மழைப் பொழிவு பதிவாகி வருகிறது. இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை சரியான நேரத்தில் தொடங்கி, சரியான அளவில் மழையை அளித்து வருகிறது. இந்த வடகிழக்குப் பருவ மழையால், சென்னைக்கு இந்த ஆண்டுக் கிடைக்க வேண்டிய சராசரி தண்ணீர் இப்போதே கிடைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில், மதுராந்தகம் ஏரியின் நிலை எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடலாம் என்கிற அளவில் இருப்பதாக பொதுமக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
சமீப நாட்களாக தொடர்ந்து பெய்து வந்த மழையால், மதுராந்தகம் ஏரி நிரம்பும் சூழல் நிலவுகிறது. மதுராந்தகம் ஏரியின் கொள்ளளவு 694 மில்லி கன அடி. இதன் பரப்பளவு 2 ஆயிரத்து 411 ஏக்கர். இந்த ஏரியில் 5 மதகுகள் உள்ளது. இந்த ஏரியைத் தூர்வாரி 50 ஆண்டுகள் ஆனதாக அப்பகுதியினர் சொல்கின்றனர்.
ஏரியை முறையாக அதிகாரிகள் பராமரிக்காததாதல் ஏரியின் தானியங்கி மதகுகள் வழியாக நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. ஏரி நிரம்பினால், நீரில் ஏற்படும் அழுத்தம் காரணமாக கசிவு ஏற்படும் மதகுகளில் உடைப்பு ஏற்படலாம் என அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். மதுராந்தகம் ஏரியின் இந்த அபாய நிலையால், ஏரியை சுற்றியுள்ள 20 கிராம மக்களும் அச்சத்தில் உள்ளனர். மதகுகளில் ஏற்படும் நீர் கசிவை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
newstm.in