தமிழகத்தில் ரயில்வே துறையின் புது சேவை! 5 ஸ்டார் தரத்தில் எக்ஸிகியூட்டிவ் லவுஞ்ச்!
தமிழகத்தில், ஐ.ஆர்.சி.டி.சி ரயில் பயணிகளுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலின் தரத்திற்கு சேவைகளை அளிக்கும் புது திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
தமிழகத்தில், தற்போது மதுரை ரயில் நிலையத்தில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. மதுரை ரயில் நிலையத்தின் முதல் ப்ளாட்பாரத்தில் நீங்கள் நடந்து வரும் போது, கண்களைக் கவரும் விதத்தில் அழகாக வடிவமைக்கப்பட்ட ஓய்வெடுக்கும் அறைகளைப் பார்த்திருக்கலாம். நமக்கு ஏதோ சம்பந்தமில்லாத இடத்திற்குச் செல்வதைப் போல இருக்கும் இந்த லவுஞ்ச் உள்ளே நுழைந்ததும், விசாலமான வரவேற்பு பகுதி பயணிகளை வரவேற்கிறது.
ஐ.ஆர்.சி.டி.சி யின் புதிய முயற்சியாக முதலில் மதுரையில் துவங்கியிருக்கும் இந்த திட்டத்திற்கு பயணிகளிடையே பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. பயணிகளிடம் பெரும் பாராட்டைப் பெற்றிருப்பதால், மதுரையை அடுத்து, திருச்சியிலும்.. தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களிலும் செயல்படுத்த ஐ.ஆர்.சி.டி.சி. திட்டமிட்டிருக்கிறது.
ரயிலில் பயணம் செய்பவர்கள் 60 ரூபாயைக் கொடுத்து நீங்கள் இந்த லவுஞ்சைப் பயன்படுத்தி ஓய்வெடுத்துக் கொள்ளலாம். இந்த சேவையப் பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு இலவச தண்ணீர் பாட்டில், வசதியான இருக்கைகள், செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகள், இலவச இணைய சேவையைப் பயன்படுத்திக் கொள்வதற்கு வைஃபை வசதி, ஷூ பாலீஷ் போடுவதற்கு தனி இயந்திரம், கூடவே சுத்தமான, சுகாதாரமான முறையில் ஓய்வறையும் கிடைக்கிறது.
ஒரு நாள் பயணமாக மதுரைக்குச் செல்பவர்களாக இருந்தால், ரூ.150 செலுத்த வேண்டும். அப்படி அவர்கள் ரூ.150 செலுத்தினால், ஷவர் மற்றும் உடை மற்றும் வசதியுடன் பேஸ்ட், ஷேவிங் கிட், சோப்பு, ஷாம்பு மற்றும் சீப்பு ஆகியவைகள் கிடைக்கின்றன. சுத்தமான குளியல் அறையையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ரயிலில் மதுரையில் இறங்கியதுமே இங்கே அறையில் நாம் குளித்து முடித்து, பயணத்திற்கு தயாராகலாம். இந்த அடிப்படையான விஷயங்களுக்காக தனியே வெளியில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்க வேண்டியதில்லை. நட்சத்திர ஹோட்டல் போல அத்தனை வசதிகளைச் செய்துக் கொடுத்தாலும், இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்வதற்கு மிகக் குறைந்த அளவிலேயே கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாய்ப்பு இருப்பவர்கள் மதுரைக்குச் செல்லும் போது பயன்படுத்திப் பாருங்கள்!
newstm.in
newstm.in