காதலித்ததால் ஆத்திரம்! பெற்ற மகளையே வெட்டிக் கொன்ற தந்தை!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வேறு சாதி நபரை காதலித்து வந்த மகளை கொன்று, உடலை துண்டு துண்டாக்கி சூட்கேசில் எடுத்து சென்ற தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஜானுபூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்த் திவாரி பணியின் காரணமாக தனது மகள் பிரின்சியுடன் மும்பையில் வசித்து வந்தார்.
தனது வீட்டில் இருந்து இரண்டு சூட்கேஸ்களுடன் ஆட்டோவில் ஏறிய திவாரி மும்பை கல்யாணி ரயில் நிலையத்திற்கு சென்றார். அங்குள்ள ஒரு ஆற்றில் சூட்கேஸை தூக்கி எறிந்துவிட்டு மற்றொரு சூட்கேஸுடன் ஆட்டோவில் ஏறினார். மேலும் அவர் வைத்திருந்த சூட்கேஸ்களில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் திவாரியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
பின்னர் விரைந்து வந்த போலீசார் அவர் கையில் வைத்திருந்த மற்றொரு சூட்கேசை திறந்து பார்த்த போது அதில் துண்டு துண்டாக ஒரு பெண்ணின் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதன் காரணமாக திவாரியை கைது செய்து விசாரித்த போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. திவாரியின் மகள் பிரின்சி, வேறு சாதியைச் சேர்ந்த இளைஞரை காதலித்துள்ளார். இதற்கு திவாரி எதிர்ப்பு தெரிவித்த போது பிரின்சி தனது காதலை கைவிட மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த திவாரி, மகளை கொலை செய்து விட்டு, உடலை துண்டு துண்டாக வெட்டி 2 சூட்கேசில் அடைத்துள்ளார். மேலும் அந்த சூட்கேசுடன் ஆட்டோவில் ஏறிய அவர் கல்யாணி ரயில் நிலையத்தில் அதில் ஒன்றை வீசி எறிந்துள்ளார்.
newstm.in