கல்யாண போட்டோஷூட்களில் ஆபாசம் அதிகமிருக்கு! பிரீ வெட்டிங் ஷூட்டிற்கு தடை! திருமண நிகழ்ச்சியில் மணப்பெண் நடனமாடக்கூடாது!
திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் சேர்ந்து போட்டோஷூட் நடத்தக்கூடாது என்று போபாலில் ஜெயின் மற்றும் குஜராத் சமாஜ் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
சமீப காலங்களால், இந்தியாவில் திருமணத்திற்கு முன்பு மணமக்கள் ஜோடியாக சேர்ந்து போட்டோசூட் நடத்துவது வழக்கமான ஒன்றாக மாறி விட்டது.
திருமண ஜோடிகளின் இந்த ஆசை ஒரு கட்டத்தில் அலப்பறையாகவே மாறி விட்டது. ஒருவருக்கு ஒருவர் முத்தம் கொடுத்துக் கொள்வது, சேற்றை வாரி இறைப்பது, கட்டிப் பிடித்து ஹனிமூன் கொண்டாடும் ஜோரில் புகைப்படங்களை எடுத்துத் தள்ளுவது என்று இந்த ப்ரீ வெட்டிங் போட்டோக்களால் பல திருமணங்கள் நிச்சமானதோடு நின்று போன வரலாறுகளும் உண்டு. இந்நிலையில், ஜெயின் மற்றும் குஜராத்தை சேர்ந்த மணமக்களுக்கு போபாலில் திருமணம் நடக்க இருக்கிறது. சந்தோஷத்தில் இருந்த மணமக்களுக்கு பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. அது என்னவென்றால் இருவரும் சேர்ந்து திருமணத்திற்கு முன்பு போட்டோசூட் நடத்தக் கூடாது என்று அவர்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் சேர்ந்து போட்டோஷூட் நடத்தக் கூடாது என்றும் திருமணம், சங்கீத் போன்ற நிகழ்ச்சிகளில் பெண்கள் நடனமாட ஆண் பயிற்சியாளரை நியமிக்கக் கூடாது என்றும் போபாலில் ஜெயின் மற்றும் குஜராத் சமாஜ் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
திருமணத்திற்கு முன்பு மணமக்கள் போட்டோசூட் நடத்துவது பெரும்பாலான இடங்களில் ஆபாசமாக இருப்பதாக கூறி அந்த அமைப்பை சேர்ந்த சிலர் புகார் அளித்துள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போபால் ஜெயின் தலைவர் பிரமோத் ஹிமான்ஷூ கூறியுள்ளார். மேலும் தங்களுடைய கலாச்சாரத்தை கட்டிக்காக இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் .
இது போன்ற சில போட்டோசூட்களால் பல திருமணங்களில் பிரச்னைகள் ஏற்பட்டதாலும் சில திருமணங்கள் நின்றதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போபால் சிந்தி பஞ்சாயத்து தலைவர் பவான் தேவ் இஸ்ராணி கூறியுள்ளார். இதுதொடர்பான அறிக்கை அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்றும் அதை கடைபிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இருந்த போதும் இதற்கு ஆதரவாகவும் பலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். திருமணத்திற்கு முன்பாக நடக்கும் போட்டோசூட்கள் ஒரு சில நினைவுகளுக்காகத்தான் என்றும், அதில் எந்த ஆபாசமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். திருமணம் நிச்சயக்கப்பட்ட ஒருவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது. இதற்கு தடை விதிப்பது சரி அல்ல என்றும் கூறியுள்ளனர்.
இன்னும் சில பேர் ஒருவர் தன்னுடைய விருப்பப்படி செயல்படுவதற்கு உரிமை இருக்கிறது. பார்ப்பதற்கு தவறாக இருந்தால் அது அவர்களுக்கு இருக்கும் பிரச்னை என்றும் கூறியுள்ளனர். திருமணத்திற்கு முன்பான போட்டோசூட்களில் மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு தங்களுடைய காதலை வெளிப்படுத்திக் கொள்கின்றனர், அதைத் தடை செய்வது நியாமில்லை என்றும் கூறியுள்ளனர்
newstm.in