போலீசார் மீது கொலைவெறி தாக்குதல்! ரவுடி கும்பலின் அடாவடி செயல்!
புதுச்சேரியில் கொலை வழக்கில் ஜாமினில் கைதாகி தலைமறைவான குற்றவாளியை பிடிக்க சென்ற காவலர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் கொலை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர் திருபுவனை பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனன். அவர் தனது நண்பர்களான ஏராளமான ரவுடிகளுக்கு விருந்து வைக்கும் தகவல் காவல்துறையினருக்கு தெரியவந்தது.
இதையடுத்து உதவி ஆய்வாளர் ராஜசேகர், காவலர்கள் பார்த்தசாரதி, நடராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஜனார்த்தனனை கைது செய்ய முயன்றனர். அப்போது காவல்துறையினரை கண்டதும் மற்ற ரவுடிகள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கி, கத்தி, வெடிகுண்டுகளை காட்டி மிரட்டி கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இந்த தகவலை அடுத்து 50 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கரும்பு தோட்டத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் அனைவரும் தப்பியோட ரவுடி சாத்ராக் மட்டும் பிடிபட்டார். அவரை கைது செய்த காவல்துறையினர் அங்கிருந்த துப்பாக்கி, கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காவலர்கள் மீது ரவுடிகள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்து ஜனா மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு தொழிலாளர் ஒப்பந்த சங்கத்தலைவரான வேல் அழகன் கொலை வழக்கில் ஜனார்த்தனன் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ஜாமினில் வெளியே வந்த ஜனார்த்தனன், மீண்டும் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். தொடர்ந்து பல குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது. இந்த நிலையில், ஜனார்த்தனன் தலைமறைவானார்.
newstm.in