சிறார் ஆபாச வீடியோ... தமிழகத்தில் முதல் கைது..
சிறார்களின் ஆபாச வீடியோ பகிர்ந்ததற்காக தமிழகத்தில் முதன்முறையாக திருச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்கள், சிறார்களின் மீதான பாலியல் வன்கொடுமையை தடுக்கும் வகையில், ஆபாச இணையதளங்கள் தடை செய்யப்பட்டது. ஆனால், பல இணையதளங்கள் ஆபாச வீடியோக்களை வெளியிட்டு வந்தன. இந்நிலையில், பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., ரவி, ''சிறார்கள் தொடர்பான ஆபாச படம் மற்றும் வீடியோ பார்த்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள், விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் சிறார்கள் தொடர்பான ஆபாச படம் பார்ப்பது குற்றச்செயல் எனவும் எச்சரித்தார்.
இதை தொடர்ந்து சமூக வலைதளங்கள் கண்காணிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், சிறார்களின் ஆபாச படங்களை பகிர்ந்ததாக தமிழகத்தில் முதல் முறையாக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் ராஜ், என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி, காஜாபேட்டையை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்(43). இவர் ஏசி மெக்கானிக் தொழில் செய்து வருகிறார்.
இவர், 'நிலவன் நிலவன்', 'ஆதவன் ஆதவன்' உள்ளிட்ட பெயர்களில் போலி முகநூல் தொடங்கி 2 ஆண்டுகளாக தொடர்ந்து ஆபாச படங்களை அதில் பதிவேற்றி வந்துள்ளார். இந்நிலையில், பேஸ்புக் மெஸஞ்சர் மூலமாக சுமார் 15 பேருக்கு சிறார்களின் ஆபாச படங்களை அனுப்பியதற்காக இன்று கைது செய்யப்பட்டார். இவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க திருச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதி வனிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், கிறிஸ்டோபர் ஆபாச படங்களை அனுப்பிய 15 பேரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், கிறிஸ்டோபர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் ஏ.டி.ஜி.பி., ரவி தெரிவித்துள்ளார். மேலும், தெரியாமல் சமூக வலைதளங்களில் ஆபாச படங்களை பார்த்தவர்கள் பயப்பட வேண்டாம் என்றும், வேண்டுமென்றே இது போன்ற படங்களை பகிர்பவர்கள் தான் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
Newstm.in
newstm.in