மனைவியை தூக்கி கொண்டு மூச்சிரைக்க ஓட்டம்! வினோத போட்டி !!
மனைவியை கணவர் தூக்கி சுமந்து செல்லும் வித்தியாசமான பந்தயம் ஒன்று தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வீரசிகாமணி கிராமத்தில் நடைபெற்றது. இதில், ஏராளமான தம்பதியர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
வாழ்க்கையில் எத்தனை சுமைகள் இருந்தாலும், மனைவியை சுமந்து ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு சுகமான அனுபவத்தை பெற எந்த கணவனுக்குதான் விருப்பம் இருக்காது?
தார்சாலையில் நடத்தப்பட்ட போட்டியில் தங்கள் இல்லத்தரசிகளை குழந்தைகளை போல கையில் தூக்கிக் கொண்டும், முதுகில் உப்பு மூட்டையாக சுமந்து கொண்டும் கணவன்மார்கள் தயாராக இருந்தனர்.போட்டி ஆரம்பிக்கப் பட்டதும் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு மனைவியரை தூக்கிக் கொண்டு ஓடினர். மனைவியை குழந்தை போல கையில் தூக்கிச்சென்ற கணவன்மார் 3 பேரும் தங்கள் மனைவியரை நடுரோட்டில் மண் பானையை போட்டு உடைப்பது போல பொத்தென்று விழுந்தனர்.கடைசியில், மனைவியரை உப்பு மூட்டை போல சுமந்து சென்ற இருவர் மட்டும் வெற்றிகரமாக எல்லைக் கோட்டை கடந்தனர்.
இந்த குறும்புத்தனமான போட்டியை பயன்படுத்தி 3 கணவன்மார்கள் தங்கள் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டதாக கூடியிருந்தவர்கள் கமெண்ட் அடித்தாலும், விழுந்தவர்களுக்கு தான் வலி தெரியும் என்கின்றனர் போட்டி ஏற்பாட்டாளர்கள்...! பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த இப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
தம்பதியினரிடையே இணக்கமான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக 1800-ம் ஆண்டு வாக்கில் பின்லாந்தில் தொடங்கப்பட்ட இந்த பந்தயம், பின்னர், பல நாடுகளுக்கும் பரவியது. இதன் தொடர்ச்சியாகவே ஒவ்வொரு ஆண்டும் பின்லாந்து, பிரிட்டன், ஆஸ்திரேலியா, வடஅமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மனைவியை சுமந்து செல்லும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. தற்போது இந்த போட்டி சாம்பியன்ஷிப் போட்டியாக நீரிலும், நிலத்திலும், சகதியிலும் ஜோடிகள் இறங்கிச் செல்லும் விதமாக தக்க பாதுகாப்பு விதிமுறைகளுடன் நடத்தப்படுகின்றது
newstm.in