1. Home
  2. தமிழ்நாடு

இன்று முதல் தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு!!

இன்று முதல் தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு!!

தூத்துக்குடி மாவட்டத்தில் அலங்காரத்தட்டு எனும் பகுதியில் வரும் ஜனவரி 10ம் தேதியன்று தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியனின் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அந்தப் பகுதிகளில் அசம்பாவிதங்கள் ஏதும் நடந்து விடாமல், அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திடவும், தூத்துக்குடி வருவாய் மாவட்டத்தில் இன்று முதல் ஜனவரி 11ம் தேதி காலை 6.00 மணி வரையில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் இந்த காலத்தில் தூத்துக்குடி மாவட்டத்திலும், அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்தும் விழாவில் கலந்து கொள்ள வரும் பொதுமக்களில் 5க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றாகக் கூடுவதற்கும், பொதுக்கூட்டம் நடத்துவதற்கும், ஜோதி எடுத்து வருவதற்கும், ஊர்வலம் நடத்துவதற்கும், வாள், கத்தி, கம்பு, வேல்கம்பு, குச்சி, கற்கள் மற்றும் இதர அபாயகரமான பொருட்களைக் கொண்டு செல்வதற்கும், கட்சி மற்றும் சமுதாய கொடிகளைக் கொண்டு வருவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் மேற்படி விழாவிற்கு கலந்து கொள்ள பொது மக்களை அழைத்து வருவதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும், குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் தூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், தினசரி செல்லும் ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு பொருந்தாது. மேற்படி நிகழ்ச்சியினை அமைதியான முறையில் நடத்திட மாவட்ட காவல் துறையின் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேற்படி நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்தவிருப்பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை அணுகி முன் அனுமதி பெற்றுக் கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like