1. Home
  2. விளையாட்டு

இங்கிலாந்துக்கு எப்படி 6 ரன்கள் தந்திருக்கலாம்? : கொந்தளிக்கும் ஆஸி., அம்பயர்!

இங்கிலாந்துக்கு எப்படி 6 ரன்கள் தந்திருக்கலாம்? : கொந்தளிக்கும் ஆஸி., அம்பயர்!

இங்கிலாந்து -நியூசிலாந்து அணிகள் மோதிய உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி மற்றும் சூப்பர் ஓவர் ஆட்டம் டிராவில் முடிவடைந்ததையடுத்து, இந்தப் போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்துள்ள அணி என்ற முறையில், இங்கிலாந்து அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது.

ஐசிசியின் இந்த முடிவை, கிரிக்கெட் ஜாம்பவான்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், இறுதி போட்டியின் கடைசி ஓவரில் இங்கிலாந்துக்கு ரன் கொடுக்கப்பட்ட முறையும் விமர்சனத்துக்கு உட்பட்டுள்ளது.

அதாவது, இங்கிலாந்து வெற்றி பெற கடைசி ஓவரில் 3 பந்துகளில் 9 ரன்கள் எடுத்தாக வேண்டும். அந்த அணியின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக களத்தில் போராடி வந்த பென் ஸ்டோக்ஸ், போல்டு வீசிய பந்தை லெக் சைடில் அடித்துவிட்டு, இரண்டு ரன்கள் ஓட முயல்வார்.

அப்போது நியூசிலாந்து அணி வீரர் குப்டில், ஸ்டோக்ஸை ரன் - அவுட் ஆக்கும் நோக்கத்தில் ஸ்டெம்பை நோக்கி பந்தை வேகமாக வீச, அது ஸ்டெம்பையும் பதம் பார்க்காமல், விக்கெட் கீப்பர் கைக்கும் செல்லாமல், ஓவர் த்ரோவாகி, பவுண்டரிக்கு சென்றுவிடும். இதையடுத்து, ஸ்டோக்ஸ் ஓடி எடுத்த இரண்டு ரன்கள், ஓவர் த்ரோ மூலம் கிடைத்த 4 ரன்கள் என மொத்தம் அந்த பந்தில் 6 ரன்கள் கிடைக்கும்.

ஆனால், ஐசிசி விதிகளின்படி, ஆறு ரன்கள் தந்திருக்கக் கூடாது. 5 ரன்கள் அளித்திருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் அம்பயரான சைமன் டஃபள் கூறியுள்ளார். அவர் மேலும் கூறும்போது, "பீல்டர் கையிலிருந்து பந்து ஸ்டெம்பை நோக்கி வரும்போது, பேட்ஸ்மேன் கிரீஸை அடைந்துவிட்டாரா? இல்லையா? என்பதை கணக்கில் கொண்டுதான் ரன் அளிக்கப்பட வேண்டும்.

நேற்றைய போட்டியில், பரபரப்பான கடைசி ஓவரின் மூன்றாவது பந்தை அடித்துவிட்டு, ஸ்டோக்ஸ் இரண்டாவது ரன்னை எடுக்க, கிரீஸை அடைவதற்கு முன்பே, பீல்டர் கையிலிருந்து வந்த பந்து கிரீஸை கடந்துவிட்டது.

எனவே, அந்த தருணத்தில் ஓவர் த்ரோவின் மூலம் கிடைத்த பவுண்டரியையும் சேர்த்து இங்கிலாந்துக்கு ஐந்து ரன்களை தான் தந்திருக்க வேண்டும். விதியின்படி, ஐந்து ரன்களை மட்டும் தந்திருந்தால், அடுத்த பந்தை ஸ்டோக்ஸ் சந்திக்க வாய்ப்பு கிடைத்திருக்காது. அவர் எதிர்முனையில் தான் நிற்கும்படி ஆகியிருக்கும்.அப்போது ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கலாம் என்று, இங்கிலாந்தின் வெற்றியை சைமன் டஃபள் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like