கால்பந்து போட்டி வன்முறைக்கு நடுவே போலீஸ் அதிகாரி மரணம்
நேற்று பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் ஐரோப்பிய லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற்றன. சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு பின், ஐரோப்பிய அளவிலான மிகப்பெரிய கால்பந்து தொடர் இதுவாகும்.
ஸ்பெயின் நாட்டின் பாஸ்க் பகுதியில் நடைபெற்ற ஒரு போட்டியில், அத்லெடிக் பில்பாவோ அணியுடன், ரஷ்யாவின் ஸ்பார்ட்டக் மாஸ்க்கோ அணி மோதியது. இரு அணிகளின் ரசிகர்களுமே வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவது வாடிக்கை என்பதால், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருத்தது.
வன்முறைக்கு காரணமான 'அல்ட்ராஸ்' எனப்படும் தீவிர ரசிகர்கள், எதிரணி ரசிகர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அது கைகலப்பாக மாறியது. அடிதடி மட்டுமல்லாமல், இரு அணிகளின் ரசிகர்களும் ஒருவர் மீது ஒருவர் பட்டாசுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
சுமார் 500 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். கடும் போராட்டத்திற்கு பிறகு வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால், எர்ஸெயின்சா என்ற மூத்த போலீஸ் அதிகாரி, கலவரத்தை அடக்க முயற்சி செய்திருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
அவரது குடும்பத்துக்கு ஸ்பெயின் நாட்டின் பிரதமர், ஸ்பெயின் கால்பந்து கழகம், ஐரோப்பிய கால்பந்து கழகம், இரு அணிகளின் நிர்வாகங்கள் என பல தரப்பில் இருந்து ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டது. வன்முறைகளுக்கு ஸ்பெயின் பிரதமர் ரஜோய் கண்டனம் தெரிவித்து பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டார்.
newstm.in