1. Home
  2. விளையாட்டு

95வது நிமிடத்தில் ஓன் கோல்; மொரோக்கோ ஷாக் தோல்வி!


ஃபிபா உலகக் கோப்பையின் இரண்டாவது நாளான இன்று, கடைசி நிமிடத்தில் மொரோக்கோ வீரர் அடித்த ஓன் கோலால் ஈரான் த்ரில் வெற்றி பெற்றது.

போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய நட்சத்திர அணிகள் உள்ள குரூப் B-யில் உள்ள மொரோக்கோ மற்றும் ஈரான், ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் இன்று மோதின. பெரிய அணிகளை வீழ்த்துவது மிக கடினம் என்பதால், இந்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்று 3 புள்ளிகளை பெற்றுவிட வேண்டும் என ஈரான் மற்றும் மொரோக்கோ உறுதியாக இருந்தன.

துவக்கம் முதலே, மொரோக்கோ அட்டாக் செய்து ஆட, ஈரான், நிதானமாக கவுன்ட்டர் அட்டாக் முறையை கடைபிடித்தது. திடமாக தடுப்பு ஆட்டம் ஆடினாலும் அவ்வப்போது, ஈரானுக்கு சில நல்ல வாய்ப்புகள் கிடைத்தன. மொரோக்கோ சிறப்பாக விளையாடி பல வாய்ப்புகளை உருவாக்கியது. ஆனால், ஈரான் கோல் கீப்பர் சிறப்பாக செயல்பட்டதாலும், மொரோக்கோவின் அட்டாக் வீரர்கள் நல்ல வாய்ப்புகளை மிஸ் செய்ததாலும், கோல் இல்லாமல் போட்டி நகர்ந்தது. மொரோக்கோ வீரர் நோர்டன் அம்ராபாட் ஈரான் வீரர் மீது மோதியதில் தலையில் காயம் ஏற்பட்டது. போட்டிக்குள் அவர் நுழைய முயற்சித்தும், மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். அதன்பிறகு, அவரது சகோதரர் சோபியான் அம்ராபாட் களமிறங்கினர்.

கடைசி நிமிடங்களை எட்டியபோது, 5 நிமிடங்கள் கூடுதல் நேரத்தை நடுவர் வழங்கினார். தொடர்ந்து மொரோக்கோ அட்டாக் செய்து வந்தது. அப்போது, தேவையில்லாமல் ஒரு பவுல் செய்து ஆபத்தான பகுதியில் ப்ரீ கிக் வாய்ப்பை கொடுத்தார், மாற்று வீரர் சோபியான் அம்ராபாட். அப்போது, பந்தை பெனால்டி பாக்ஸுக்குள் ஈரான் வீரர் ஹஜ்சாபி பாஸ் செய்ய, அதை மாற்று வீரராக களமிறங்கிய மொரோக்கோவின் பூஹாடூஸ் தவறுதலாக தனது கோலுக்குள்ளேயே முட்டி தள்ளினார். 94 நிமிடங்கள் சிறப்பாக விளையாடிய மொரோக்கோ கடைசி நிமிட கோலால் தோற்றது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

குரூப் B-யின் அடுத்த போட்டி போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெற இருக்கிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like