1. Home
  2. விளையாட்டு

கடைசி நிமிடத்தில் மெஸ்ஸி அடித்த சூப்பர் கோல்

கடைசி நிமிடத்தில் மெஸ்ஸி அடித்த சூப்பர் கோல்


ஸ்பெயின் நாட்டின் லா லிகா கால்பந்து லீக் போட்டியில் நேற்று அதிரடி வீரர் லியோனல் மெஸ்ஸி, கடைசி நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.

சமீபத்தில் அர்ஜென்டினா தேசிய அணிக்காக விளையாட சென்ற மெஸ்ஸி, காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்கவில்லை. மெஸ்ஸி இல்லாமல், அர்ஜென்டினா 6-1 என ஸ்பெயின் அணியிடம் தோற்றது. அதன்பின் தனது க்ளப் அணியான பார்சிலோனாவுக்கு மெஸ்ஸி திரும்பினார்.

லீக் போட்டிகளில் பார்சிலோனா இதுவரை ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை. 29 போட்டிகள் விளையாடியுள்ள பார்சிலோனா, 23 வெற்றி 6 டிரா என 75 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. நேற்று செவில்லா அணியுடன் முக்கிய போட்டியில் மோதியது. ஸ்பெயின் நாட்டின் சரித்திரத்திலேயே எந்த அணியும் ஒரு போட்டி கூட தோல்வியடையாமல் கோப்பையை வென்றதில்லை. இன்னும் 9 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், பார்சிலோனாவால் அந்த சாதனையை படைக்க முடியுமா என்ற எதிர்பார்ப்பு பலமாக இருந்தது.

உடல் முழுமையாக குணமடையாததால், நட்சத்திர வீரர் மெஸ்ஸி இந்த போட்டியில் விளையாடவில்லை. அவர் இல்லாததால் கோல் அடிக்க முடியாமல் பார்சிலோனா தவித்தது. அசத்தலாக விளையாடிய எதிரணி செவில்லா, முதல் பாதியில் ஒரு கோலும், இரண்டாவது பாதியில் ஒரு கோலும் அடித்து 2-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது கோலுக்கு பின் 58வது நிமிடத்தில் மாற்று வீரராக மெஸ்ஸி உள்ளே வந்தார். அவர் நுழைந்தவுடன் பார்சிலோனா அணி கோல் அடிக்க பல வாய்ப்புகளை உருவாக்கியது.

அதேநேரம், செவில்லா அணி வீரர்களும் பல வாய்ப்புகளை உருவாக்கினார்கள். இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காமல் போட்டி கடைசி 3 நிமிடங்களுக்குள் நுழைந்தது. 88வது நிமிடத்தில் பார்சிலோனாவுக்கு கார்னர் கிக் வாய்ப்பு கிடைக்க, சுவாரஸ் கோல் அடித்தார். அதன்பின் அடுத்த நிமிடமே, சுமார் 30 அடி தூரத்தில் இருந்து மெஸ்ஸி கலக்கலாக ஒரு கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். இதனால், பார்சிலோனா தோல்வியடையாமல் லீக் கோப்பையை வென்று சாதனை படைக்கும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.


நேற்று நடந்த மற்றொரு போட்டியில், ரியல் மாட்ரிட் 3-0 என லாஸ் பால்மாஸ் அணியை வீழ்த்தியது.

newstm.in

Trending News

Latest News

You May Like