நூலிழையில் உயிர் தப்பிய வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் நாடு திரும்பினர்!
நியூசிலாந்தில் உள்ள மசூதியில், கடந்த வெள்ளியன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில், வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் நூலிழையில் உயிர்தப்பிய நிலையில், அவர்கள் இன்று தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பினர்.
நியூசிலாந்தில் உள்ள கிறைஸ்ட்சர்ச் பகுதியில் இருக்கும் மசூதியில் கடந்த 15ம் தேதி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் உலகையே உலுக்கி உள்ளது. இதில் 50 பேர் பலியாகியுள்ளர். இந்த சம்பவம் நடந்தபோது, வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள் அந்த மசூதிக்கு தொழுகைக்காக சென்றனர். அங்கு துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடப்பதை பார்த்த வீரர்கள் அங்கிருந்து ஓடி தப்பியுள்ளனர்.
இதுகுறித்து அந்த அணி வீரர்கள் தங்கள் ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். நியூசிலாந்துக்கு வங்கதேச கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து அந்த தொடர் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று வங்கதேச அணியினர் தங்கள் சொந்த நாட்டிற்கு வந்தனர். வங்கதேச அணியின் ஷகிப் அல் ஹசன் அந்த தொடரில் விளையாடாததால் அவருக்கு பதிலாக மஹ்முத்துல்லா ரியாத் கேப்டனாக செயல்பட்டார். வங்கதேசம் வந்த அவர், "அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி வந்திருப்பதாகவும், அந்த சம்பவத்திற்கு பிறகு அவர்கள் தூங்கவே இல்லை" என்றும் கூறினார்.
newstm.in
newstm.in