மூடப்படும் நிலையில் ஏர் இந்தியா நிறுவனம்
ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்யவில்லை என்றால் நிறுவனத்தை மூட நேரிடும் என காப்பா போக்குவரத்து மையம் எச்சரித்துள்ளது.
கடனில் நொடித்துப் போயிருக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய முயல்கிறது இந்திய அரசாங்கம். அந்த விமான நிறுவனம் தனியாரிடம் ஒப்படைக்கப்படலாம் என்று மார்ச் மாதம் இந்திய அரசாங்கம் அறிவித்திருந்தது.
ஆனால், இதுவரை எந்த நிறுவனமும் ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்க முன்வரவில்லை. ஏற்கனவே கடனில் மூழ்கிக் கிடக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கிக் கரையேற்றுவது சிரமம் என்று தனியார் நிறுவனங்கள் எண்ணுவதாகத் தெரிகிறது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் ஊழியர் செலவு, கடன் குறித்து இந்திய அரசாங்கம் முன் வைத்துள்ள நிபந்தனைகள் முதலீட்டாளர்களின் விருப்பத்திற்கு மாறாகவுள்ளது என்பதை நிபுணர்கள் சுட்டுகின்றனர்.
1932இல் சேவையைத் தொடங்கிய ஏர் இந்தியா நிறுவனம் ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்தது. ஆனால் மலிவுக் கட்டண விமானச் சேவைகள் வழங்கும் தனியார் நிறுவனங்கள் அதிகமானதிலிருந்து ஏர் இந்தியாவின் லாபம் வெகுவாக குறைந்து விட்டது. நிறுவனத்தின் 76 விழுக்காட்டுப் பங்குகளை விற்பதன் மூலம் சுமார் 5 பில்லியன் டாலர் கடனை அரசாங்கம் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முயல்கிறது.
இந்நிலையில் ஏர் இந்தியா பங்குகளை விரைந்து விற்கத் தவறினால், நிறுவனத்தை மூட நேரிடும் என காப்பா எனப்படும் ஆசிய பசிபிக் பிராந்திய விமானப் போக்குவரத்து மையம் எச்சரித்தள்ளது.
மேலும்,அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏர் இந்திய நிறுவனத்தில் கூடுதலாக 200 கோடி வரை இழப்பீடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அந்த நிறுவனத்தின் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in