தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்!
தமிழக அரசு எடுத்த நடவடிக்கை திருப்திகரமாக இருந்ததால், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் இன்று முடித்து வைத்துள்ளது.
தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே 22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், போராட்டக்கார்களை கலைக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து, துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இது தொடர்பான வழக்குகள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணையில் இருந்து வருகிறது
இந்த வழக்கில், ஸ்டெர்லைட் ஆலையினை ஆய்வு செய்ய நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதேபோன்று, துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைத்து எடுத்த நடவடிக்கை திருப்திகரமாக இருந்ததால், வழக்கை முடித்து வைப்பதாக மனித உரிமை ஆணையம் தெரிவித்து இதுதொடர்பான வழக்குகளை இன்று முடித்து வைத்துள்ளது.
newstm.in
newstm.in