அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தமிழகப்பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஒரிரு இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தில் 9 செ.மீ என பதிவாகியுள்ளது.
மேலும், இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், வட மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் அவ்வப்போது மிதமான மழை பெய்யலாம்.
ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை தற்போது 3ம் கட்டம் நிறைவு பெறுகிறது. ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் இயல்பு அளவு 204 மி.மீ. பதிவான மழையின் அளவு 179 மி.மீ. இது இயல்பை விட 12% குறைவு. ஆனால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தேனி, திண்டுக்கல், கோவை, நெல்லை மாவட்டங்களில் இயல்பை விட அதிகளவு மழை பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, பெரம்பலூர் மாவட்டங்களில் குறைவாக பதிவாகியுள்ளது" என்றார்/
newstm.in
newstm.in