வியாழனின் நிலாவில் உயிரிகள் சாத்தியம்: ஆய்வில் புதிய தகவல்
வியாழன் கிரகத்தின் துணை கிரகமான யூரோப்பாவின் தட்பவெப்ப சூழ்நிலையை ஒத்த தங்கச் சுரங்கத்தின் அடி ஆழத்தில், சூரிய வெளிச்சத்தையே பார்க்காத, அணுக் கதிர் ஆற்றலை ஆதாரமாக பயன்படுத்தி வாழும் பாக்டீரியாவை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதன்மூலம், வேற்று கிரகத்தில் உயிர்கள் வாழ்கிறதா என்று ஆய்வு செய்ய சரியான இடமாக யூரோப்பா இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வியாழன் கிரகத்தின் நிலாவாக இருக்கும் (துணை கிரகம்) யூரோப்பாவின் நிலப்பரப்பை பிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோ பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். யூரோப்பாவின் நில மேல்பரப்பில் ஐஸ்படுகைகள் உள்ளன. அந்த ஐஸ் கட்டிகளுக்கு அடியில், சில கி.மீ ஆழத்தில் கடல் அளவுக்கு தண்ணீர் மறைந்துள்ளது. இதனால் அங்கு உயிரினங்கள் வாழும் சூழ்நிலை இருக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
யூரோப்பாவின் தட்பவெப்பநிலை, நில அமைப்புக்கு ஏற்ப பூமியில் ஏதேனும் இடம் இருக்கிறதா, அங்கு உயிரினங்கள் வாழ்கின்றனவா என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் பார்வையில், தென்ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பெர்க் அருகே உள்ள போங்யங் தங்கச் சுரங்கம் தென்பட்டது. உடனடியாக போங்யங் தங்க சுரங்கத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். சுரங்கத்தின் 2.8 கி.மீட்டர் ஆழத்தில், சூரிய ஒளியே படாத இடத்தில் தண்ணீரில் பாக்டீரியா உயிர் வாழ்வதும் கதிரியக்கங்களை அவை பயன்படுத்திக்கொள்வதும் தெரியவந்தது.
யுரோப்பாவின் சூழலை ஒத்துப்போகும் போங்யங் சுரங்கத்தில் உயிரிகள் வாழ்வதால், யூரோப்பாவிலும் உயிரிகள் வாழ்வதற்கான சாத்தியம் உள்ளது. எனவே வேற்று கிரகத்தில் உயிர்கள் வாழ்கிறதா என்று ஆய்வு செய்ய சரியான இடமாக யூரோப்பா இருக்கும் என்ற முடிவுக்கு சாவ் பாவ்லோ பல்கலைக் கழக விஞ்ஞானிகள் வந்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in