எம்.பியாக மக்களவைக்கு செல்லும் 'ஒடிஷாவின் மோடி' - யார் தெரியுமா?
நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக 303 இடங்களில் தனித்து வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைகிறது. அதேபோன்று பல்வேறு மாநிலங்களிலும் பாஜக முக்கிய இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
இதில் ஒடிஷாவிலிருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் பிரதாப் சந்திர சாரங்கி. இவர், ஒடிசாவில் பாலசோர்(Balasore) என்ற மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். முன்னதாக ஒடிஷாவின் நில்கிரிஸ்(Nilgiris) சட்டப்பேரவை தொகுதியில் இருந்து இரண்டு முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சாரங்கி.
கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக சார்பில் போட்டியிட்ட இவர், தோல்வியை தழுவினார். தொடர்ந்து தற்போது 2019 மக்களவை தேர்தலில் அவர் பிஜு ஜனதா தளம் கட்சி வேட்பாளரை 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, வெற்றி பெற்றுள்ளார்.
இவர் 'ஒடிஷாவின் மோடி' என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறார். அதற்கான காரணம் என்னவென்று பார்ப்போம்..
ஒடிஷாவில் நில்கிரிஸ் பகுதியில் கோபால்நாத்பூர்(Gopalnathpur) என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதாப் சந்திர சாரங்கி. இவர் சிறு வயதிலிருந்தே ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவர். பருவ வயதிலேயே சந்நியாசியாக செல்ல வேண்டும் என்ற ஆசையில், அவர் காசிக்கு சென்றுள்ளார். அங்கு மடத்திலிருந்த ஆன்மிகவாதிகள், அவருக்கு விதவையான தாயார் உள்ளதை அறிந்து, தாயாரை கவனித்துக்கொள்ளுமாறு அவருக்கு ஆலோசனை கூறி அனுப்பிவிட்டனர். அவர்கள் கூறியதை ஏற்றுக்கொண்டு, சாரங்கியும் தனது தாயாரை கவனித்துக் கொள்ள சொந்த ஊருக்கு திரும்பினார்.
தாயாரை கவனித்துக் கொண்டதுடன், அருகில் உள்ள மக்களுக்கு ஒரு சிறு சிறு உதவிகளை செய்ய ஆரம்பித்தார். தொடர்ந்து தன் வாழ்க்கையை முழுவதுமாக சமூக சேவையில் அர்ப்பணித்துக்கொண்டார். அங்குள்ள ஏழை, எளிய மக்களுக்காக, முக்கியமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அப்பகுதியில் குழந்தைகளுக்காக பல்வேறு கல்விக் கூடங்களை கட்டியுள்ளார். இருந்தாலும், தனக்கென்று அவர் எதுவும் செய்துகொண்டதில்லை. ஒரு சிறிய மண்ணால் கட்டப்பட்ட குடிசை வீட்டில் வசித்து வருகிறார். சொந்தமாக வாகனம் எதுவும் இல்லை. எங்கு சென்றாலும் அவர் சைக்கிளில் தான் செல்வார். மிகவும் எளிய வாழ்க்கையை வாழ்ந்து வரும் அவர், மக்களுக்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். அவரது தாயார் கடந்த வருடம் இயற்கை எய்தினார்.
மக்களுக்காக வாழ்ந்து வரும் இவரை, தற்போது அப்பகுதி மக்கள் தேர்தலில் வாக்களித்து, மக்களவைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தனது பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பதே நோக்கம் என்று பிரதாப் சாரங்கி கூறியுள்ளார். ஒடிசா மக்கள் பலரும் புகைப்படத்துடன் இவர் மக்களுக்கு ஆற்றிய பணிகள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இது தவிர இவர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவராம். பிரதமர் நரேந்திர மோடி ஒடிசாவுக்கு செல்லும் போது, சாரங்கியை சந்திக்காமல் சென்றது இல்லை என்று ஒரு முக்கிய தகவல் உள்ளது.
தேர்தலில் ஒரு தேசிய கட்சியில் போட்டியிட வேண்டும் என்றால், ஒரு சீட்டுக்கு லட்சக்கணக்கில் பணம் செலவாகும் என்று கூறப்படும் நிலையில், பாஜகவிலிருந்து ஏழை எளிய ஒருவருக்கு வாய்ப்பு அளித்து, அவரை தேர்தலில் ஜெயிக்க வைத்திருப்பது பாஜகவின் சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
newstm.in
newstm.in