உன்னாவ் வழக்கு: எம்எல்ஏ குல்தீப் சிங் வீட்டில் சிபிஐ சோதனை
உன்னாவ் சிறுமி பாலியல் வழக்கு தொடர்பாக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த 2017ஆம் ஆண்டு பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவரது தந்தை மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதனிடையே கடந்த வாரம் உன்னாவ் சிறுமி சென்ற கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சிறுமியின் உறவினர்கள் இருவர் உயிரிழந்தனர். சிறுமி மற்றும் அவரது வழக்கறிஞர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். இதில் சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் உன்னாவ் பெண் பயணம் செய்த கார் மீது மோதிய லாரியின் உரிமையாளர் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பாஜக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட, பாலியல் புகார் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள குல்தீப் சிங் செங்கார் சமாஜ்வாதி கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சிறுமி பாலியல் வழக்கு தொடர்பாக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். உன்னாவ், ஃபதேபூர், லக்னோ உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.
newstm.in
newstm.in