டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம் : மாணவர்கள் போராட்டம் !!!
ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம் : ஹாஸ்டாலுக்கான கட்டண உயர்வுக்கு எதிராக மேற்கொண்டிருக்கும் போராட்டத்தில், பல்கலைகழகம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளின் படி பல்கலைகழக பொருட்களை சேதப்படுத்தவில்லை என்றும், கல்லூரி விடுதியின் கட்டணம் உயர்த்தப்பட்ட விவகாரத்தில் இருந்து அனைவரையும் திசை மாற்றவே இத்தகைய குற்றச்சாட்டுக்களை பல்கலைகழக நிர்வாகம் முன்வைப்பதாகவும் கூறியுள்ளது அப்பல்கலைகழக மாணவர் சங்கம்.
டெல்லியில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் விடுதி கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து சுமார் 15 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அப்பல்கலைகழக மாணவர்கள். இதனிடையில், கட்டண அதிகரிப்பை வாபஸ் வாங்குவதாக பல்கலைகழக செயலாளர் அறிவிப்பு விடுத்திருந்ததை தொடர்ந்தும் போராட்டத்தை கைவிட மறுத்த மாணவர்கள், கட்டண உயர்வு வாபஸ் வாங்கப்படவில்லை என்றும், சிறு மாறுதலே செய்துள்ளதாகவும் குற்றம் சுமத்தி வந்தனர்.
இந்நிலையில், பல்கலைகழகத்தின் திறக்கப்படாத விவேகானந்தர் உருவச்சிலை உட்பட பல்வேறு பகுதிகளிலும் நிர்வாகத்தினருக்கு எதிரான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ள அப்பல்கலைகழக மாணவர் சங்கத்தின் தலைவர், இந்த பதிவுகளுக்கு பல்கலைகழக மாணவர்கள் காரணம் இல்லை என்றும், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனப்படும் அகில இந்திய மாணவர் சங்க மாணவர்கள் தான் காரணம் என்றும் கூறியுள்ளார். மேலும், இது போன்ற செயல்களில் ஜெஎன்யூ மாணவர்கள் ஒருபோதும் ஈடுபட மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பல்கலைகழக வளாகத்தில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களை முழுவதுமாக சுத்தம் செய்த பல்கலைகழக நிர்வாகம், இத்தகைய செயல்களை மேற்கொண்டிருந்தது யாராக இருப்பினும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.
மேலும், சிசிடிவி கேமிராக்களின் பதிவுகளின்படி, இச்செயல்களில் ஈடுபட்டிருந்த 10 மாணவர்கள் பல்கலைகழகத்திலிருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களை தொடர்ந்து, இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்டிருந்த மற்ற மாணவர்களுக்கு 20,000 ரூபாய் அபராத தொகையாகவும், விடுதியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும் தீர்மானித்துள்ளது நிர்வாகம்.
Newstm.in
newstm.in