எர்ணாகுளத்தில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து களமிறங்கும் பிரபல நடிகை!
எர்ணாகுளம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹிபி ஈடனை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட போவதாக, நடிகை சரிதா நாயர் அறிவித்துள்ளார்.
கேரளாவில் சோலார் பேனல் முறைகேடு வழக்கில் நடிகை சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது இந்த முறைகேடு புகார் எழுந்தது. இதனை விசாரிக்க கமிஷனும் அமைக்கப்பட்டது. இந்த வழக்கில், அப்போதைய முதல்வர் உம்மன்சாண்டிக்கும் தொடர்பு இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றம்சாட்டியது.
இந்த வழக்கில் கைதான சரிதா நாயர் பல மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவர், காங்கிரஸ் அரசில் அமைச்சர்களாக இருந்த பலரும் பண மோசடி செய்ததாக குற்றம்சாட்டினார். மேலும் உம்மன் சாண்டி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹிபி ஈடன் ஆகியோர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவர் கூறினார்.
கேரளாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, சரிதா நாயர் தெரிவித்த பாலியல் புகார் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் ஹிபி ஈடன் உள்பட பலர் சேர்க்கப்பட்டனர். ஹிபி ஈடன் மீதான வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அவர், எர்ணாகுளம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதற்கு சரிதா நாயர் எதிர்ப்பு தெரிவித்தார்.
பாலியல் புகாரில் சிக்கிய ஹிபி ஈடனை வேட்பாளராக அறிவித்துள்ளதை ஏற்க முடியாது என்று கூறிவந்த சரிதா நாயர், எர்ணாகுளம் தொகுதியில் ஹிபி ஈடனை எதிர்த்து சுயேச்சையாக களம் இறங்க உள்ளதாக தற்போது அறிவித்துள்ளார்.
newstm.in
newstm.in