அமெரிக்காவில் சிறார் கைதிகள் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை
அமெரிக்காவில் சிறார் குற்றவாளிகளின் உணவைத் திருடி விற்ற ஊழியருக்கு 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் சிறுவர் சீர்திருத்த சிறை உள்ளது. அங்கு சிறுவர்களுக்காக வழங்கப்படும் உணவை தனியார் நிறுவனத்திலிருந்து வாகனம் மூலம் எடுத்து வரப்படும்போது திருடப்படும் விவகாரம் நடந்து வந்துள்ளது. இந்தத் திருட்டு முறைகேடு சுமார் 9 ஆண்டுகளாகவே நடந்து வந்துள்ளது.
பாஜிடாஸ் என்பது மெக்சிகோ மக்களின் பாரம்பரிய வகை உணவு. மாட்டு இறைச்சி அல்லது சிக்கனுடன் காய்கறிகளை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இந்த வகை உணவு சுமார் ரூ.8 கோடி அளவில் திருடி வெளியில் விற்கப்பட்டு வந்தது சமீபத்தில் அம்பலமானது.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சிறையில் பணிபுரியும் ஊழியர் கில்பெர்டோ எஸ்காமில்லா (53) என்பவர் சிக்கினார். இதனைத் தொடர்ந்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
பின்னர் இவர் மீதான திருட்டு வழக்கு விசாரணையின் இறுதியில் கில்பெர்டோ எஸ்காமில்லா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவருக்கு 50 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
newstm.in