இலங்கை நாடாளுமன்றக்கூட்டம்: ரணில் அணியினர் அமளி; ராஜபக்சே வெளிநடப்பு!
இலங்கையின் பரபரப்பான அரசியல் சூழலில் இன்று நாடாளுமன்றம் கூடிய நிலையில், சபாநாயகர் கரு ஜெயசூரிய, நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கான பெயர்களை பரிந்துரைத்தார்.
இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார் அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன. பின்னர் ரணிலுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றதாலும், ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை இல்லாததாலும் நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்தது, இதைத்தொடர்ந்து சில நாட்கள் நாடாளுமன்றம் கூடிய நிலையில், ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். மேலும், அடுத்தடுத்த நாட்கள் நாடாளுமன்றத்தில் ரணில் மற்றும் ராஜபக்சே கட்சி எம்.பிகளுக்கு இடையே கடும் மோதல் நிலவியது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்றும் நாடாளுமன்றம் சபாநாயகர் தலைமையில் கூடியது. ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியினரும், ராஜபக்சே தரப்பினரும் கூட்டத்தில் பங்கேற்றனர். சபாநாயகர், நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கான பெயர்களை பரிந்துரைத்தார். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரணில்ஆதரவாளர்கள் அமளியில் ஈடுபட தொடங்கினர். ராஜபக்சே ஆதரவாளர் தினேஷ் குணவர்த்தன பேச்சுக்கு ரணில் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதால் ராஜபக்சே ஆதரவாளர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
newstm.in
newstm.in