இலங்கையின் ராணுவத்துறை செயலர் மற்றும் காவல்துறை தலைமை அதிகாரி ராஜினாமா?
இலங்கையின் ராணுவத்துறை செயலர் மற்றும் காவல்துறை தலைமை அதிகாரி ஆகியோரை ராஜினாமா செய்ய அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று(ஏப்.21), தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது உலகையே உலுக்கியுள்ளது.
இந்த கொடூரத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் வெளிநாட்டவர்கள் 39 பேர். மேலும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்னும் ஒரு சில இடங்களில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டு வருகின்றன. இதனால் தலைநகர் கொழும்புவில் பதற்ற நிலை நீடித்து வருகிறது. இலங்கையில் பெரும்பாலாக அனைத்து இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மீட்புப்பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 32 பேரிடம் சிஐடி ோபலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடிகுண்டுடன் தற்கொலை செய்துகொண்டு கூட்டத்தில் ஏனையோரையும் கொல்வதற்கு காரணமான உயிரிழந்த தீவிரவாதிகள் 8 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும், இலங்கை அதிகாரிகள் கவனத்தில்கொள்ளவில்லை. இதற்கான இலங்கை மக்களிடம் இலங்கை அரசு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது என்று அந்நாட்டின் செய்தி தொடர்பாளர் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில், ராணுவத்துறை செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் காவல்துறை தலைமை அதிகாரி புஜித் ஜெய சுந்தரா ஆகியோரை ராஜினாமா செய்ய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். இன்று கொழும்புவில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் இந்த தகவலை உறுதி செய்துள்ளாராம்.
newstm.in
newstm.in