இலங்கை குண்டுவெடிப்பு: 49 பேர் பலி; 280 பேர் காயம்!
இலங்கையில் தேவாலயங்கள், ஹோட்டல்கள் என 6 இடங்களில் இன்று சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்ததில் 49 பேர் பலியாகியுள்ளதாகவும், 280க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈஸ்டர் பண்டிகையையொட்டி, இலங்கையில் பல்வேறு தேவாலயங்களில் இன்று காலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், நீர் கொழும்பு தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம், 3 நட்சத்திர விடுதிகள் என 6 இடங்களில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்துள்ளன.
இதில், 25 பேர் பலியாகியுள்ளதாகவும், 280க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்பட்ட நிலையில், இச்சம்பவத்தில் இதுவரை 49 பேர் பலியாகியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதில் கொழும்புவில் 25 பேரும், மட்டக்களப்பு பகுதியில் 24 பேரும் உயிரிழந்துள்ளனர்.
குண்டுவெடிப்பு நடந்த இடங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதிபர் மைத்திரிபால சிறிசேனா, பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு வருகிறார். இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
ஈஸ்டர் பண்டிகையை அன்று, தேவாலயங்களில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
newstm.in
newstm.in