முல்லைத்தீவு சிங்கள மயமாகும்! மாகாண சபை உறுப்பினர் எச்சரிக்கை
வடமாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள குடியேற்றங்கள் செய்யப்பட்டு வருவதால் முல்லைத்தீவு சிங்கள மயமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வடமாகாண சபையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக இலங்கையின், தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் வேகமாக அமைக்கப்பட்டு வருகின்றது. அதில் அதிகமாக கடல் கரையோர தமிழ் மக்களின் நிலங்களை ராணுவ உதவியுடன் அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றன. கடந்த வாரம் முல்லைத்தீவில் சிங்கள குடும்பங்களை குடியமர்த்த எடுக்கப்பட்ட முயற்சிகளைத் தொடர்ந்து அங்கு தமிழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு சமூகங்களுக்கும் இடையில் பதற்றம் நிலவியது. அங்கு தற்போது சிங்கள மக்களுக்காக நீர் வழங்கள் திட்டம் ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், "சிங்கள மக்களுக்காக அமைக்கப்பட உள்ள 'ஹிபுல் ஓயா' என்ற நீர் வழங்கள் திட்டம், தமிழ் மக்களின் நிலங்களிலேயே அமைக்கப்பட உள்ளது. இதற்காக தமிழ் மக்களின் வாழ் நிலங்கள், விவசாய நிலங்கள் மற்றும் குளங்கள் என்பன ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மிக ஆபத்தானது. மேலும் பெருமளவில் சிங்கள மக்களை முல்லைத்தீவில் குடியமர்த்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது" என்றார்.
newstm.in