இந்தியாவுக்கு சாதகமான சட்டம் வராது: அமைச்சர் அமரவீர
இந்தியாவுக்கு ஏற்ற வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடியாதென இலங்கை கடல் தொழில்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் படி, எல்லை தாண்டி இலங்கைக்குள் நுழைந்து மீன் பிடித்தால் அவர்களுக்கு 17.5 லட்ச ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்துக்கு இந்திய மீனவர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமது வாழ்வாதாரம் பாதிக்காத படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய அரசுக்கு மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக பிரதமர் நரோந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, “இலங்கையின் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கிலேயே சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை மீன்பிடி சட்டத்தில் இந்தியாவுக்கு ஏற்ற வகையில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது.
இலங்கை மீன்பிடி சட்டத்தில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் திருத்தத்துக்காக போராட்டம் நடத்துவதை தவிர்த்து இந்திய மீனவர்கள் எல்லை தாண்டாது தமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பதே சிறந்தது.
மேலும் இலங்கைக்குள் சட்டவிரோதமாக வரும் எந்தவொரு வெளிநாட்டு மீன்பிடி படகுகளுக்கும் இடமளிக்கப் போவதில்லை. இந்தியர்களின் சம்பிரதாயபூர்வமான மீன்பிடித் தொழிலை முன்னெடுப்பதற்கு இலங்கை கடல் பிரதேசத்தில் இடமளிக்க முடியாது என்பதில் இலங்கை அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது” என்றார்.
கச்சத்தீவை இந்தியாவிடம் இருந்து வாங்கிக்கொண்டு அமைச்சர் பேசிய விதம் இந்தியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in