இயக்குநர்கள் நடிகர்களாகி சாகடிக்கின்றனர்: நடிகர் சித்தார்த் ஆதங்கம்!
தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் எல்லாம் நடிகர்களாக சாகடிப்பதாக நடிகர் சித்தார்த் கூறினார்.
ராம் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சலி, சாதனா ஆகியோர் நடித்திருக்கும் படம் பேரன்பு. இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சித்தார்த், "இந்த நிகழ்ச்சியில் பல இயக்குநர்கள் வந்துள்ளனர். மிஷ்கின், ராம், அமீர், சமுத்திரக்கனி ஆகியோர் வந்துள்ளனர். இவர்களை பார்த்துவிட்டு வீட்டிற்கு சென்றால்,எனது தந்தை.."அவர்கள் என்ன பேசினார்கள்" என்று கேட்பார். 10 வருடத்திற்கு முன் இதே கேள்விக்கு, "நான் அவங்க கிட்ட நடிக்க வாய்ப்பு கேட்டேன்" என்று கூறியிருப்பேன். ஆனால் இப்போது, அவர்களே நடித்து சாகடிக்கிறார்கள். எங்களுக்கு நடிக்க வாய்ப்பு வருவதில்லை. இந்த சபையில் ஒன்றை கூற நினைக்கிறேன், "உலகத்திலேயே சிறந்த இயக்குநர்கள் எல்லாம் இனி நடிக்க வராமல் படமே இயக்குங்கள்.
தற்போது அனைவரும் ராமை பாராட்டுகிறார்கள். அதற்கு காரணம் பாலுமகேந்திரா. அவர் அருகில் இருந்து வளர்ந்தவர்கள் அவர்கள். வெற்றி, ராம், பாலா ஆகியோர் அப்படி வந்தவர்கள் தான். அதனால் அவர்களிடம் தனி தைரியம் இருக்கிறது.
நா.முத்துக்குமார் இல்லாமல் ஒரு படத்தை ராம் முடித்திருக்கிறார். அந்த தைரியத்தை நான் பாராட்டுகிறேன். அவர் இல்லாமல் ஒரு பாட்டை உருவாக்குவது உங்களுக்கு எவ்வளவு கஷ்டம் என்பது எனக்கு தெரியும். ராம் உடன் வேலை செய்வதே கடினமான ஒன்று.. அவருடன் வாழ்வது எவ்வளவு கடினம் என்று நாங்கள் எப்போதும் பேசிக் கொள்வோம். தற்போது அவரது மனைவி இந்த படத்தில் பாடலாசிரியராக பணிப்புரிந்துள்ளார். சுமதி ராமுக்கு வாழ்த்துக்கள்.
அடுத்து யுவன், அவர் என் தம்பி போல. அவரை சந்திக்கும் போதெல்லாம் அவரது ரசிகர்கள் திட்டி இருக்கிறேன். எப்போதும் யுவனின் கம்பேக் என்று அவர்கள் கூறுகின்றனர். யுவன் நிலையாக இருப்பவர். இனி யுவனின் கம்பேக் என யாராவது கூறினால் அடித்துவிடுவேன்" என்றார்.
newstm.in