கட்சியை உடைப்பாரா அழகிரி? அச்சத்தில் திமுக தலைமை
திமுக தலைவர் மு.கருணாநிதியின் மறைவை தொடர்ந்து, கருணாநிதியின் மகன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. சகோதரர்களுக்கு இடையே உள்ள சண்டைகளை மறந்து சுமூகமாக செல்ல, அழகிரிக்கு கட்சியின் மண்டல பொறுப்பை வழங்க உள்ளதாகவும், அவரது மகனுக்கும் கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், அழகிரியை கட்சிக்குள் வர விடக் கூடாது என திட்டவட்டமாக கூறியுள்ளதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகின்றன. அழகிரி மாநில அளவில் கட்சி பொறுப்பு எதிர்பார்ப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளாராம். தற்போது கட்சி சரியாக இயங்கி கொண்டிருப்பதாகவும், அழகிரியை மீண்டும் சேர்த்தால், அது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்துள்ளாராம். நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை எந்த நிலையிலும், எவ்வளவு நெருக்கடி வந்தாலும் அழகிரி கட்சிக்குள் சேர்க்கப்படக் கூடாது என அவர் திட்டவட்டமாக கூறியுள்ளாராம்.
திமுக செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், தனது பின்னால் தான் உண்மையான திமுக தொண்டர்கள் உள்ளனர் என அழகிரி இன்று கூறியுள்ளார். முக ஸ்டாலின் தன்னை கட்சியை விட்டு விலக்கி வைக்க முயற்சித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் திமுக பொதுக்குழு கூட்டத்தில், முக ஸ்டாலினை கட்சியின் தலைவராக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் திமுக வட்டாரங்களில் பேசப்படுகின்றன.
கலைஞர் இறந்து ஒரே வாரத்தில் கட்சியை உடைக்க முனைந்துவிட்ட அழகிரி, ஸ்டாலின் தலைவராக்கப்படுவதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டாரே, என்ற அச்சத்தில் உள்ளதாம் திமுக தலைமை.
newstm.in