தமிழ் எழுத, படிக்க தெரியாதவர்களுக்கும் கீழமை நீதிமன்றங்களில் வேலை... வழக்கறிஞர்கள் எதிர்ப்பு
தமிழ் எழுத, படிக்க தெரியாதவர்களும் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்ற தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு தமிழ் எழுத படிக்க தெரியாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என்ற ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் பணி புறக்கணிப்பு மற்றும் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வழக்கறிஞர்கள், கீழமை நீதிமன்றங்களை பொருத்தவரை தமிழ்தான் பிரதான மொழியாக இருக்கின்றது எனவே தமிழ் தெரியாதவர்கள் அந்த பதவிக்கு விண்ணப்பித்தாலும் எந்த ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை எனவே தற்போது வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதேபோல், கும்பகோணத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இன்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பணிகளை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார்.
Newstm.in
newstm.in