விதிகளை பின்பற்றியே சுர்ஜித் உடல் காண்பிக்கப்படவில்லை: ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கைவிடுத்துள்ள நிலையில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடம் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடம் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: வானிலை ஆய்வு மைய தகவலின் படி, அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநில, தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மீது கவனம் செலுத்தும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மீன்வளத்துறை மூலமாக அனைத்து மீனவர்களுக்கும் உரிய முறையில் எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற படகுகளில் 7 படகுகள் கடலுக்குள் உள்ளன. அதில் 2 படகுகளை தொடர்பு கொண்டு அறிவுறுத்தியுள்ளோம். தொடர்ந்து அவர்கள் இணைப்பில் உள்ளனர். மீதமுள்ள 5 படகுகளை தொடர்பு கொள்ள முயற்சிகள் நடைபெற்று வருகிறது. தங்கு கடல் மீன்பிடிப்புக்கு சென்ற 99 சதவீத படகுகள் திரும்பிவிட்டன.
குழந்தை சுஜித் மீட்பு பணியின் போது விதிகளை முறையாக பின்பற்றினோம். சுஜித் பெற்றோருக்கு மனநிலை ஆலோசனை வழங்கி வருகிறோம். சுஜித்தை மீட்க மனிதனால் எடுக்கப்பட வேண்டிய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டன. களத்தில் இருந்தோரை தவறாக சித்தரிக்க வேண்டாம். அனைவருமே வருத்தத்துடன் உள்ளோம். மீட்பு பணியில் தொழில்நுட்ப அணிகள் இல்லை என்பது தவறான தகவல்.
சுஜித் உயிரிழந்து துர்நாற்றம் வந்தபின் தான் உடலை மீட்க நடவடிக்கை எடுத்தோம். இறந்த உடலை கையாளும் விதிகள் முழுமையாக பின்பற்றப்பட்டன. கும்பகோணம் தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் உடலை காட்டியதில் விமர்சனம் எழுந்தது. ஆகவே மத்திய அரசின் விதிகளை பின்பற்றியே உடல் காண்பிக்கப்படவில்லை. தவறான தகவலையோ, குற்றச்சாட்டையோ சுமத்த வேண்டாம். பேரிடர் முயற்சிகளுக்கு ஆன செலவு குறித்து வரும் தகவல்கள் அனைத்தும் தவறானது. பேரிடர் மீட்பு முயற்சியின் போது பணம் ஒரு பொருட்டல்ல, மீட்பு பணியே முக்கியம்".
Newstm.in
newstm.in