சிலை கடத்தல் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய அமைச்சர்!
சிலைகடத்தல் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் திணறினார்.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகத்தில் கோயில்களுக்கு நன்கொடை வழங்குவதற்கான புதிய இணையதளத்தை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
தனியார் வங்கியுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தில், முதற்கட்டமாக சென்னை வடபழனி முருகன் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட ஐந்து கோயில்கள் இணைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்திற்கு சொந்தமான கோயில்கள் விரைவில் இதில் இணைக்கப்படும் என நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் சேவூர் ராமசந்திரன் பதிலளித்தார். இருப்பினும், சிலைகடத்தல் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறி அவர், உடனே பேட்டியை முடித்து கொண்டு புறப்பட்டார்.
கேள்வி: திருவாரூர் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் சேதமான நிலையில் உள்ளன. இதற்கு அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
பதில் : உரிய வல்லுநர்களை அமைத்து சிலைகள் பராமரிக்கப்படும்
கேள்வி : சிலை பராமரிப்பு மையங்கள் அதிக அளவில் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருக்கிறது. அதற்கு அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
பதில்: ஏற்கெனவே பராமரிப்பு மையங்கள் உள்ளன. தற்போது நீதிமன்ற உத்தரவின்பேரில் கூடுதலாக 3000 மையங்கள் கோயில்களின் உள்ளே அமைக்கப்பட உள்ளன.
கேள்வி: சிலைகள் மேலும் காணாமல் போகாமல் இருக்க அரசு என்ன திட்டங்களை கொண்டுவர உள்ளது. இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
பதில் : அனைத்து மையங்களிலும், கோயில்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
கேள்வி: கேமரா பொருத்தப்பட்டும் சிலைகள் காணாமல் போகின்றனவே?
பதில்: ....
கேள்வி: சிலைகடத்தல் வழக்கு விசாரணையில் அரசு தமக்கு ஒத்துழைப்பு தரவில்லை என பொன்மாணிக்கவேல் குற்றம்சாட்டியுள்ளாரே?
பதில் : ....
newstm.in