ஐ.டி.ரெய்டு: தேர்தல் ஆணையத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது வருமானவரித்துறை!
திமுக பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்ட சிலரது வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனை தொடர்பான அறிக்கையை வருமானவரித்துறையினர், தலைமை தேர்தல் ஆணையத்திற்கு இன்று அனுப்பியுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு, அவரது மகன் கதிர் ஆனந்திற்கு சொந்தமான கல்லூரி, துரைமுருகனின் நண்பருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூரில் துரைமுருகனின் நண்பருக்கு சொந்தமான சிமெண்ட் கிடங்கில் ரூ.11.53 கோடியும், துரைமுருகன் வீட்டில் ரூ.10 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து, இதற்கான அறிக்கையை வருமானவரித்துறையினர், இன்று தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். சோதனையின்போது கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் பற்றிய விவரங்கள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரித்துறையினரின் இந்த அறிக்கையை ஆய்வு செய்தபின், தேர்தல் ஆணையம் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
newstm.in
newstm.in