தாயும் சேயும் உயிரிழப்பு - தொடரும் அரசு மருத்துவமனை, மருத்துவர்கள் மீதான புகார்
ராமநாதபுரம் மாவட்டம் அரியகுடியைச் சேர்ந்த கீர்த்திகா என்ற பெண் வெள்ளிக்கிழமை இரவு பிரசவத்துக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நள்ளிரவு குழந்தை பிறந்த நிலையில், சிறிது நேரத்தில் அது இறந்துள்ளது. அடுத்த சில நிமிடங்களில் கீர்த்திகாவும் வலிப்பு ஏற்பட்டு இறந்திருக்கிறார்.
கீர்த்திகா அனுமதிக்கப்பட்டதில் இருந்து மருத்துவர்கள் வந்து சிகிச்சியளிக்காமல் செவிலியர்களே சிகிச்சையளித்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் மருத்துவர்கள், செவிலியர்களின் அலட்சியமே கீர்த்திகாவின் உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தாய், சேய் இறப்புக்கு நீதி கேட்டு உறவினர்கள் மருத்துவமனை முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவமனை மீதான இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மாவட்ட சுகாதார இணை இயக்குநர் வெங்கடாசலத்திடம் கேட்டபோது, கீர்த்திகாவுக்கு செவிலியர்கள்தான் சிகிச்சியளித்தார்களா என்பது குறித்து விசாரிக்க குழு அமைத்திருப்பதாகக் கூறினார். இதனிடையே அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு இங்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இங்கு பணிபுரியும் மருத்துவர்களில் பெரும்பாலானோர் சொந்தமாக மருத்துவமனைகள் வைத்துள்ளனர் என்றும் அங்கு வரும் நோயாளிகளை இடைத்தரகர்களை நியமித்து, பேரம் பேசி, தங்கள் மருத்துவமனைக்குச் செல்ல நிர்பந்திப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
newstm.in